Wednesday, September 17, 2014

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் – பில்லி சூனியத்திற்கு எதிரான தெளிவான ஓர் ஆய்வு நூல்

நூல் பெயர் : பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் 

ஆசிரியர் : P. ஜெய்னுலாப்தீன் (PJ)

வெளியீடு : நபீலா பதிப்பகம்

தமிழுலகில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தீவிர இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருபவரும், எளிய தமிழில் திருமறைக் குர்ஆனை மொழியாக்கம் செய்து, விளக்கவுரை எழுதியவரும், பண்ணூலாசிரியரும், பிரபல இஸ்லாமிப் பிரச்சாரகருமான சகோ. பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் புதிய புத்தகம் 'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்பதாகும்.

இறைவன் ஒருவன் தான் இருக்கின்றான், அவன் அல்லாஹ் மாத்திரம் தான், அவனுடைய தூதர்களில் இந்த உலகுக்கு அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் அவரல்லாத யாரையும், எதனையும் பின்பற்றக் கூடாது என்றும், மகான்கள், அவ்லியாக்கள், இறை நேசர்களிடம் உதவி தேடுகின்றோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்யும் காரியங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழுலகில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் பேய், பிசாசு,பில்லி சூனியம் போன்ற மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வழிமுறைகளையும் பகிரங்கமாகவும் தீவிரமாகவும் எதிர்த்து வருகின்றார்.

  • இந்த வகையில் சூனியம் தொடர்பில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்ட அவர் கடந்த ரமழான் மாதத்தில் தொடர்ந்து பத்து நாட்கள் சென்னையில் அமைந்துள்ள 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' மாநில தலைமையகத்தில் இரவுத் தொழுகையின் பின்னர் 'இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்' என்ற தலைப்பில் ஒரு தொடர் உரையாற்றினார்.
  • இவ்வுரை பொது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதுடன், சூனியக் காரர்களுக்கும், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்களுக்கும் மத்தியில் பலத்த தாக்கத்தை உண்டாக்கியது.

குறித்த உரையில் இ
வர் விடுத்த சவால் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் புதுவிதமான எதிர்பார்பை ஏற்படுத்திவிட்டது.

'சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்பவர்கள், முடிந்தால் எனக்கு சூனியம் செய்து பாதிப்பை உண்டாக்கிக் காட்டுங்கள். அப்படி பாதிப்பை உண்டாக்கிவிட்டால் அவர்களுக்கு ஐம்பது இலட்சங்கள் பணம் பரிசாகத் தருவேன்' என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார்.

  • இந்த அறைகூவல் ரமழான் முழுவதும் தமிழகத்தின் 'மெகா' தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்டது மட்டுமல்லாமல், பேஸ்புக், ட்டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களிலும் பலத்த வாதப் பிரதி வாதங்களை உண்டாக்கிவிட்டது.

இறுதியில் தமிழகம் திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் அகோரி என்ற பூசாரி சகோ. பி.ஜெ அவர்களுக்கு 'நான் சூனியம் வைத்து 48 நாட்களுக்குள் பி.ஜெ தற்கொலை செய்து மரணித்து விடுவார்' 49 வது நாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் எனக்கு ஐம்பது இலட்சங்கள் தர வேண்டும்' என்றும் தனது சூனியத்தினால் பி.ஜெ க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவிட்டால் தான் புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு பில்லி சூனியத்திற்கு எதிராக பகிரங்க பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறி பி.ஜெய்னுலாப்தீனுக்கு சூனியம் செய்வதற்கு ஒத்துக் கொண்டார்.

இருவரும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்ட இந்த சூனிய ஒப்பந்தம் முடிவதற்கு இன்றும் சுமார் 10 நாட்களே உள்ளன. அதாவது எதிர்வரும் 17.09.2014 அன்று இறுதித் தேதியாகும்.

நிலைமை இவ்வாறிருக்க பில்லி சூனியம் குறித்து இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கின்றது? என்பது பற்றிய தெளிவான செய்திகளை உள்ளடக்கிய ஒரு ஆய்வுத் தலைப்பாக 'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற தலைப்பில் தற்போது ஒரு அருமையான புத்தகத்தினையும் சகோ. பி.ஜெ அவர்கள் வெளியிட்டுள்ளார்.

சுமார் 228 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் ஒவ்வொரு முஸ்லிம்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல தகவல்களை உள்ளடக்கியதாகும்.

ஆரம்ப கால ஏகத்துவப் பிரச்சாரங்களின் போது சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும், நபியவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இது தொடர்பில் வரக் கூடிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்த சகோதரர் பி.ஜெ அவர்கள் இது தொடர்பில் மீண்டும் ஆய்வு செய்து, குறித்த செய்திகளின் தவறுகளையும், புனித குர்ஆனுக்கு மாற்றமான போக்கையும் தெளிவாக தனது உரைகளின் மூலம் விளக்கினார்.

'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற இந்த நூலின் மூலம் சூனிய நம்பிக்கையில் வாழ்க்கையைத் தொலைத்து, மறுமையை இழக்கும் காரியத்தில் ஈடுபடும் சாமானிய முஸ்லிம்களுக்கு ஒரு மிகப் பெரிய தெளிவை வழங்கும் விதமாக இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.

  • மார்க்கம் இரு வகை!
  • திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் எவ்வாறு புரிந்து கொள்வது?

ஆகிய இரண்டு தலைப்புக்களில் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் இறை வேதமான திருமறைக் குர்ஆன், நபியவர்களின் வார்த்தைகளான ஹதீஸ்களை ஆகியவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது போன்ற விபரங்கள் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளன.

  • 'குர்ஆனுடன் மோதும் சில ஹதீஸ்கள்' என்ற தலைப்பில்,
  •  இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா?
  • நபியாவதற்கு முன்னர் மிஃராஜ் நடந்திருக்குமா?
  • ஏர் கலப்பை பழிப்பிற்குறியதா?
  • உலகத்தை படைக்க ஏழு நாட்களா?
  • அன்னியப் பெண்ணுடன் நபியவர்கள் நெருக்கமாக இருந்தார்களா?
  • குர்ஆன் வசனம் காணாமல் போகுமா?
  • சுலைமான் நபியை கொச்சைப்படுத்தலாமா?
  • வானவரின் கன்னத்தில் மூசா நபி அறைந்தார்களா?
  • ஒரு பெண் அந்நிய இளைஞருக்கு பாலுட்டலாமா?
போன்ற சிறு தலைப்புக்களில் ஹதீஸ் – நபி மொழி என்ற பெயரில் புனித குர்ஆனுக்கு நேர் முரனாக அமைந்த சில போலி ஹதீஸ்கள் பற்றிய விரிவான விளக்கங்களும் குறித்த செய்திகளை உண்மையானவை என்று நம்பி பிரச்சாரம் செய்யும் உலமாக்கள் முன்வைக்கும் வாதங்களுக்குறிய ஆராரப்பூர்வமான பதில்களும் அடுக்கடுக்காக முன் வைக்கப்பட்டுள்ளன.

நூலின் இரண்டாம் கட்டமாக 'சூனியம்' பற்றிய செய்திகள் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று வாதிடும் உலமாக்கள் முன் வைக்கும் முக்கிய ஆதாரங்கள் 'நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?' என்ற தலைப்பில் வேறு வேறு வாசகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 06 ஹதீஸ்கள் ஆராயப்பட்டுள்ளன.

அதே போல் 'குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் சூனிய நம்பிக்கை' என்ற தலைப்பில் சூனியம் பற்றிய செய்திகளை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பற்றிய முழுமையான விளக்கங்கள் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

அதே போல் இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபணம் செய்வதற்காக காலத்திற்கு காலம் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய அர்ப்புதங்களில் சந்தேகத்தை உண்டாக்கும் விதமாக இந்த சூனிய நம்பிக்கை உள்ளதை விளக்கும் விதமாக 'அர்ப்புதங்களை அர்த்தமற்றதாக்கும் சூனிய நம்பிக்கை' என்ற ஒரு தலைப்பும் இதில் உள்ளடங்கப் பெற்றுள்ளது.

இதற்கும் மேலதிகமாக,

  • சூனியம் செய்யப்பட்டதை மறுக்கும் திருக் குர்ஆன்
  • சூனியத்தை மறுக்கும் நபி (ஸல்) அவர்கள்
  • அல்லாஹ்வின் பார்வையில் சூனியம்
  • அல்லாஹ் வழங்கிய ஆற்றலினால் சூனியம் செய்யப்படுகின்றதா?
  • ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்யப்படுகின்றதா?

போன்ற தலைப்புக்களில் சூனியத்தினால் யாருக்கும், யாராலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பது சந்தேகமற தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

நூலின் மூன்றாம் கட்டமாக சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று ஒருவர் நம்புவதினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்பது தெளிவாக ஆராய்ந்து விபரிக்கப்பட்டுள்ளது.

'சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தலே!' என்ற தலைப்பில் சூனியத்தினால் யாருக்கேனும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஒரு முஸ்லிம் நம்பினால் அவன் இறைவனுக்கு இணை கற்பித்த பாவத்தில் வீழ்ந்து விடுவான் என்றும், அது பற்றிய ஆதாரங்களும் விளக்கப்பட்டுள்ளதுடன்,

  • அற்புதங்களை நம்புதல் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகுமா?
  • சாமிரி செய்த அற்புதத்தை நம்புவது இணை கற்பித்தலாகுமா?
  • தஜ்ஜால் செய்யும் அற்புதத்தை நம்புவது இணை கற்பித்தலாகாதா?

போன்ற தலைப்புக்களில் சூனியத்தை உண்மை என்று நம்புவதும், அதனால் பாதிப்பு உண்டாகும் என்று நம்புவதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பாவத்தை பெற்றுத் தரும் என்ற உண்மைக்கு மாற்றமான கருத்துக் கொண்ட உலமாக்களின் வாதங்களுக்குறிய பதில்கள் அடுக்கடுக்காக தொகுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

நூலின் நான்காவது பகுதி திருமறைக் குர்ஆனின் 02 வது அத்தியாயம் 102 வது வசனம் பற்றி விரிவாக ஆராய்கின்றது.

சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று வாதிடுவோர் முன் வைக்கும் ஆதாரங்களில் பிரதான ஆதாரமான 02:102 வது வசனம் தொடர்பில்,

02:102 வது வசனம் சொல்வது என்ன? என்ற தனித் தலைப்பிலும், திருமறைக் குர்ஆன் 113, 114வது அத்தியாயங்கள் சூனியம் தொடர்பாகத் தான் இறக்கப்பட்டதா? என்பதை விளக்கும் விதமாக '113இ 114 வது அத்தியாயங்கள் சூனியத்திற்கு ஆதாரமாகுமா?' என்ற தனியான ஒரு தலைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

  • 'சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா?' என்ற தனியான ஒரு தலைப்பில் சூனியத்தினால் எவ்வித பாதிப்பையும் உண்டாக்க முடியாது என்ற கருத்தை சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த உலமாக்கள் பிரச்சாரம் செய்வதற்கு முன் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது அவர்களின் நூல்களை ஆதாரமாக முன் வைத்து சிறப்பாக தொகுக்கப்பட்டள்ளது.
  • சூனியத்தினால் எவ்வித பாதிப்பையும் உண்டாக்க முடியாது என்பது வழிகெட்ட முஃதசிலாக்களின் கருத்து என்றும் முஃதஸிலாக்களின் வழியில் தான் தவ்ஹீத் ஜமாத் பயணிக்கின்றது என்றும் அவதூறுகளை பரப்பி வந்த உலமாக்களுக்கு சாட்டையடியாக இத்தலைப்பு தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

நான்கு மத்ஹபு அறிஞர்கள் மற்றும் புகாரி விளக்கவுரையாளரான இமாம் இப்னு ஹஜர் தொகுத்த செய்திகள் அதே போல் அறிஞர் இப்னு தைமிய்யா போன்றவர்கள் சூனியம் விஷயத்தில் கொண்டிருந்த நிலைபாடுகள் மற்றும் இமாம் ஐனி, இமாம் ஷவ்கானி, இமாம் தபரி போன்ற பல அறிஞர்களின் சூனியம் பற்றிய நிலைபாடுகள் அறபி மூலத்துடன் விளக்கமளிக்கப்பட்டு இத்தலைப்பு தொகுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நூலின் இறுதிப் பகுதியாக,

  • அதிகம் பேர் சொல்வது ஆதாரமாகுமா?
  • ஒன்றுமில்லாத சூனியம் எப்படி பாவமாக ஆகும்?
  • மேஜிக் செய்வது இணை கற்பித்தலா?

போன்ற தலைப்புக்களில் சில கேள்விகளுக்கான பதில்களும் சிறப்பாக அமைக்கப் பெற்றுள்ளன.

'முன்னர் சொன்னதை மாற்றிச் சொல்வது ஏன்?' என்ற தனித் தலைப்பில் புகாரிஇ முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்ற செய்திகளை வைத்து சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று பேசியும், எழுதியும் வந்த சகோதரர் பி.ஜெ அவர்கள் தற்பொது 'சூனியத்தினால் எவ்வித பாதிப்பையும் உண்டாக்க முடியாது' என்ற நிலைக்கு மாறியது ஏன்? என்றும் இப்படி மாறுவது சரிதானா? என்ற கேள்விக்குறிய அருமையான பதிலும் மிகச் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.

  • மொத்தத்தில் சூனியத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர்களுக்கும்,நாங்களும் தவ்ஹீத் வாதிகள் தான் என்று கூறிக் கொண்டு சூனியத்தை நம்பி இணை வைப்பில் மூழ்கியவர்களுக்கும் அவர்களின் தவறான வாதங்களுக்குறிய தெளிவான பதிலாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது என்பதில் மாற்றமில்லை.

மத்ரஸாக்களில் கல்வியை தொடரும் மாணவர்களும், ஹதீஸ் கலை மற்றும் தப்சீர் கலை ஆய்வு மாணவர்களும் குறிப்பாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறப்பான நூல் தான் 'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற நூலாகும்.






 நன்றி rasminmisc.com

-

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.