Showing posts with label சிறை. Show all posts
Showing posts with label சிறை. Show all posts

Sunday, May 11, 2014

கசகசாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? - வெளிநாடுகளுக்கு கசகசாவை எடுத்து செல்பவர்களுக்கு கடும் தண்டனை

கசகசா என்ற பொருளை உணவில் சேர்த்து பயன்படுத்தலாமா?

கசகசா என்ற பொருள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களும் பெரும்வாரியாக இதை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த கசகசா வை ஆங்கிலத்தில் Poppy Seeds என்று கூறுகின்றனர்.

இந்த பாப்பி விதை எனப்படும் கசகசா என்பது பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம் என்ற போதைப் பொருள்.

இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலோசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.

கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009ஆம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004லிம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும்,விசாரணையும் இல்லாமல் ஷரியத் கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும்,ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன்,சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.
என்று இணையதள செய்திகள் நமக்கு தெரியப்படுத்துகிறது.

போதைப் பொருட்கள் எல்லா வகைகளையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் "பித்உ" (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5585)

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்கüடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் "அவை யாவை?'' என்று கேட்டார்கள். நான் "அல் பித்உ, அல் மிஸ்ர்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் "போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி (4343)

கசகசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானே போதை வருகிறது. நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழி கவனிக்கட்டும்.

அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : திர்மிதீ (1788)

எனவே கசகசா என்ற பொருள் சேர்க்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதே சரியான வழியாகும்.

Saturday, November 30, 2013

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்! ஏன்? எதற்கு?

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எதிர்வரும்  ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக  நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

அன்புள்ள சகோதரா சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற  போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம்.

தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ,அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்கோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்கோ, தலைவர்களின் தர்ம தரிசனத்திற்காகவோ உங்களை அழைக்கவில்லை.

இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும் உங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும், நடத்தப்படும் உங்களுக்கான போராட்டம்.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை ஜெயட்லிதா அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை.

அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும்,

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நாடெங்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

காங்கிரஸ் அளித்த வாக்குறுதியையும் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,

தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும்  சிறை செல்லும் போராட்டம்(இன்ஷா அல்லாஹ்)

இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர்கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன்  வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதையும், மற்றவர்களுக்குச் சமமாக அரசியல் அதிகாரத்தை பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஆனால் உங்களின் நிலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

முஸ்லிம்களின் தியாகத்தில் இந்திய விடுதலை:

இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடமிருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களைவிட நாம் அதிக உழைப்பு செய்துள்ளோம்.

வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனது மொழியைப் படிக்கக்கூடாது என்றோம்.

படிப்பைப் பாதியில் நிறுத்தினோம்.

வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.

வழிபாட்டுத் தலங்களை கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது, வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் பிரச்சார மேடையாகப் பள்ளிவாசல்களை நாம் பயன் படுத்தினோம்.

வெள்ளையன் கொடுத்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறியபோது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.

உடலாலும், பொருளாலும், உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம்.

இன்றைய முஸ்லிம்களின் அவல நிலை:

நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்றுவிட்டார்களே, அதுபற்றிச் சிந்தித்தீர்களா?

கூலித் தொழிலாளியாகவோ

இறைச்சிக் கடைக்காரராகவோ

நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ

கொல்லுப்பட்டரையில் கடின வேலை செய்பவராகவோ

தோல் பதனிடும் தொழிலாளியாகவோ

பெட்டிக்கடை நடத்துபவராகவோ

குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும், தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?

ஒட்டகம் மேய்த்தல்

சாலை போடுதல்

கழிவுகளைச் சுத்தம் செய்தல்

உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டடங்களில் கூலித் தொழில் செய்தல்

தனியாருக்குக் கார் ஓட்டுதல்

வீடுகளைச் சுத்தம் செய்தல்

சமையல் வேலை செய்தல்

இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?

இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா?

சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா

ஆகியோரின் அறிக்கைகள் கூறுவதென்ன?

88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்கவேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் பேர் மட்டும்தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே? இந்த நிலை இனியும் தொடரலாமா?

பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம்கள் மூன்று சதவிகிதம்தான் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையைவிட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?

முஸ்லிம்களின் கல்வி, அரசியல், பொருளதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தவில்லையா?

முஸ்லிம்களின் அவலநிலைபற்றி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குறிப்பிடும்போது…

முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம் என்கிறார்.  அதாவது ஒவ்வொரு நூறு முஸ்லிம்களில் 35 பேர் ஒன்றாம் வகுப்பு கூடப் படிக்கவில்லை.

ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்புவரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது.  அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்புவரை படிக்கவில்லை.

எட்டாம் வகுப்புக்கு மேல் 10 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11பேர்தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.

பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரெண்டுவரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 5 பேர்கள்தான் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளனர்.

பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் 3 பேர்தான் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.

இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்த அவலநிலை என்றால் பொருளாதர நிலையிலாவது நமது நிலை உயர்ந்திருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா?

பொருளாதாரத்தில் கடைசிநிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டி போடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் 20 காசுகளும்தான் என்கிறது அந்த அறிக்கை.

அது மட்டுமன்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

மற்ற சமுதாய மக்களில் 100க்கு 20 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ், இருக்கும்போது, நமது சமுதாயத்தில் 100க்கு 31பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?

வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்:

இரண்டு ஆடைகளுக்குக் குறைவாக வைத்துள்ளவர்கள்

ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள்

வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள்

வீட்டு உபகரணங்கள்(டீவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள்

படிப்பறிவு இல்லாதவர்கள்

கூலி வேலை செய்பவர்கள்

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாதவர்கள்

நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்

இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா இல்லையா?

100 முஸ்லிம்களில் 35 பேர் குடி தண்ணீர் கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும்

100 முஸ்லிம்களில் 41  பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி  இல்லாத வீடுகளிலும்

100க்கு 23 முஸ்லிம்கள்தான் வசிக்கத் தகுந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் ரங்கநாத் மிஸ்ரா கூறுகிறார்.

நமக்குத் தாராளமான உரிமை கிடைத்துள்ளது என்றால், வகுப்புக் கலவரங்களில் கொல்லப்படுவதில் கிடைத்துள்ளது.

குஜராத் கலவரத்துக்கு முன்வரை நடந்த மொத்த கலவரங்கள் 3949. இதில் 2289 பேர் கொல்லப்பட்டதில் இந்துக்கள் 530 பேரும் முஸ்லிம்கள் 1598 பேரும் ஆவர். அதாவது 65 சதவிகிதம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்தான் நமது சதவிகிதத்தைவிட நான்கு மடங்கு இடம் கிடைத்துள்ளது.

நாட்டில் உள்ள சிறைச் சாலைகளிலும் நமக்கு தாரளமான இடம் கிடைத்துள்ளது. மொத்த கைதிகளில் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் உள்ளனர்.

நமது பேரன் பேத்திகளுக்கு இதைத்தான் நாம் பரிசாக விட்டுச் செல்ல வேண்டுமா?

நம்முடைய சமுதாயமும் கலெக்டர்களாக

உயர் அதிகாரிகளாக

டாக்டர்களாக, எஞ்சினியர்களாக

தொழில் நுட்ப வல்லுனர்களாக

வெளிநாடு சென்றாலும் மனைவி மக்களுடன் சென்று அதிக ஊதியத்துடன் பணி புரிபவராக

பெரிய தொழில் அதிபர்களாக ஆக வேண்டாமா?

இதுபற்றி சிந்திக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

நீதிபதி மிஸ்ரா அவர்கள் நமது அவல நிலையை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. அரசாங்கம் என்ன செய்தால் இந்த அவல நிலை மாறும் என்பதற்கான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார்.

ரெங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரை:

எல்லா நிலையிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு  தனியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.

எனவே நாடு முழுவதும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100க்கு 10 என்ற கணக்கில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகளில் மட்டுமின்றி சுய தொழில் தொடங்கக் கடன் வழங்குதல் போன்ற அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் பயன் பெறுவோரில் 100க்கு 10 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போல், முஸ்லிம்களுக்கும் மதிப்பெண்களைத் தளர்த்த வேண்டும்.

உத்திரப் பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் இருப்பதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்.

தரமான கல்வியை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் நவோதயா போன்ற கல்விக்கூடங்களை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தோறும் நிறுவ வேண்டும்.

கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்.

சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு சமையல் கேஸ் இணைப்பு மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.

மேற்கண்டவை முக்கிய பரிந்துரைகளாகும்.

நமது அவல நிலையை படம் பிடித்துக் காட்டியதுடன் மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் எனவும் மிஸ்ரா வழிகாட்டியுள்ளார்.

உரிமையை வென்றெடுக்க:

சரித்திரம் காணாத அளவுக்கு ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு எட்டும் வகையில் நாம் பொங்கி எழுந்தால் மட்டுமே மிஸ்ரா அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்படும். மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்.

ஜெயல்லைதா அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி 3.5 சதவிகிதம் உயர்த்தி தரப்படும்.

நாடு முழுவதும் பத்து சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் எனபதை மத்திய அரசுக்கு உணர்த்தவும்,

மாநிலத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க மாநில அரசுக்கு உணர்த்தவும்மே இந்தப் போராட்டம்.

தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உங்களைக் காட்டி விலை பேசுவோருக்கு, உங்களை அறியாமல் உதவ பல களங்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.

இப்போது உங்களுக்காக, நீங்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்காக, உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படாமல் தடுத்து நிறுத்திட…

நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய..

இத்தனை ஆண்டுகள் ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம்  என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட ..

இடஒதுக்கீட்டை அடைய எந்த்த் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட..

குடும்பத்துடன் புறப்பட்டு வாருங்கள்

அலை அலையாய் திரண்டு வாருங்கள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவிருக்கும் போரட்டக்களங்களை நோக்கி புயலென புறப்படத் தயாராகுங்கள் …

இறையருளால் வென்று காட்டுவோம்.

அணி திரள அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்