Showing posts with label கட்டுக்கதை. Show all posts
Showing posts with label கட்டுக்கதை. Show all posts

Thursday, November 07, 2013

நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜிதுந் நபவியில் கிறிஸ்தவர்களை வழிபட அனுமதித்தார்களா? - மத நல்லிணக்க விழாவில் அக்மார்க் தவ்ஹீத்வாதிகளின் கப்ஸா!

தவ்ஹீத்வாதிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் சிலர் இஸ்லாத்தை பிறருக்கு சொல்லுகிறோம் என்ற பெயரில் ஒரு விழா நடத்தினார்கள். இதில் பல  கப்ஸாகளையும் கதைகளையும் அவிழ்த்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்கா விட்டால், இந்த உலகையே படைத்து இருக்க மாட்டான் என்று இவர்கள் மத நல்லிணக்க விழாவில் விட்ட கப்ஸாவை பற்றி ஏற்கனவே நாம் அம்பலப்படுத்தியிருந்தோம்.

கொள்கையில்லாதவர்களை வைத்துக்கொண்டு நாங்கள் ஒன்றாக பிரச்சாரம் செய்கிறோம் என்றால் இப்படி தான் ஆகும் என்பதற்கு பல ஆதாரங்களை இந்த நல்லிணக்க விழாவில் இருந்து எடுத்து காட்டலாம்.  பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் வரலாமா என்று ஒருவர் கேட்டதற்கு, ஒருவர் வரலாம் என்கிறார், மற்றொருவர் வராமல் இருப்பது தான் நல்லது என்று சொல்லி, கோவில்களில் மாற்று மதத்தினர் சாதி அடிப்படையில் தடுக்கப்படுவதை சரி காணுகிறார். மேலும், கோவிலுக்கு அழைப்பு தாருங்கள் வருகிறோம் என்று பெருமையுடன் கூறுகிறார்கள்.

உங்கள் தர்காவிற்கு நாங்களெல்லாம் வருகிறோம் எங்கள் கோவிலுக்கு நீங்கள் ஏன் வருவதில்லை என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி கேட்ட போது இஸ்லாத்தை எடுத்து சொல்ல ஒரு அருமையான வாய்ப்பு அமைந்தது தர்கா என்பது இஸ்லாத்தில் இல்லை அதற்கும் இஸ்லாத்திற்கும்  சம்மந்தமில்லை பல தெய்வ வழிபாடு தவறு அதற்கு நிரந்தர நரகம் என்று இஸ்லாம் சொல்கிறது என்று அழகாக சொல்லி இருக்கலாம் அதை விடுத்து ஒரே இறைவனை வணங்க நீங்கள் கூப்பிடுங்கள் நாங்கள் வருகிறோம் என்று பொடி வைத்து பேசுவது எத்தனை பேருக்கு புரிந்து இருக்கும் இது போன்ற சமுதாய ஒற்றுமையையா இஸ்லாம் வலியுறுத்துகிறது ?

மேலும் கீழ்காணும் கப்ஸாவையும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் அள்ளிவிட்டார்கள். 

நபிகள் நாயகத்துடன் விவாதிப்பதற்காக மஸ்ஜிதுந் நபவி எனப்படும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசலுக்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் வந்திருந்தனர். அவர்களின் வழிபாட்டு நேரம் வந்ததும் புறப்பட்டனர். உடனே நபிகள் நாயகம், 'நீங்கள் விரும்பினால் இதே பள்ளிவாசலில் நீங்கள் வழிபாடு செய்யலாம்' என அனுமதி அளித்தார்கள்.

இது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறாத கட்டுக்கதையாகும். இது பற்றி இங்கு விளக்கம் வெளியிடுவதுடன் மேலும் சில தகவல்களையும் பதிய விரும்புகிறோம். மாற்று மதத்தினரை பள்ளியில் அவர்களின் வழிபாடுகளை செய்ய அனுமதிக்கலாம் என்றால், இந்த கொள்கைவாதிகள் (?) கட்டியுள்ள பள்ளியில் மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதிப்பார்களா?

அதிரையில் ஆரம்ப காலத்தில் தவ்ஹீத் பணிக்கு முன்னோடியாக இருந்த ஒரு சகோதரர் மேடையில் இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் சொல்லப்பட்டு அதற்கு அவர் மறு கருத்து சொல்லாமல் அமர்ந்து இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லி கொண்டு, உப்பு சப்பில்லாத விஷயத்தை எல்லாம் மலை அளவுக்கு உயர்த்தி எழுதும் உளறும் நிருபர்களும் இந்த கப்ஸாகளை பற்றி வாய் திறக்கவில்லை. கவிஞருக்கு இறையருள் வருகிறது என்று எழுதும் வழிகேட்டு நிரூபர்கள் இவற்றை பற்றி வாய் திறப்பார்கள் என்று  எப்படி எதிர்பார்க்க முடியும்?

பள்ளிவாசலில் சிலை வணக்கத்திற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்களா?

நபிகள் நாயகத்துடன் விவாதிப்பதற்காக மஸ்ஜிதுந்நபவி எனப்படும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசலுக்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் வந்திருந்தனர். அவர்களின் வழிபாட்டு நேரம் வந்ததும் புறப்பட்டனர். உடனே நபிகள் நாயகம், "நீங்கள் விரும்பினால் இதே பள்ளிவாசலில் நீங்கள் வழிபாடு செய்யலாம்' என அனுமதி அளித்தார்கள்.

மேற்கண்ட சம்பவம் நபியவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சம்பவமாகும்.

இதுபோன்ற ஒரு சம்பவம்  ஆதாரமற்ற சில நூற்களில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நூற்களிலுமே இப்னு இஸ்ஹாக் என்பார் வழியாகத்தான் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்னு இஸ்ஹாக் என்பவருக்கு இந்தச் சம்பவத்தை அறிவிப்பவர் “முஹம்மத் பின் ஜஃபர் பின் சுபைர்” என்பவர் ஆவார். இவர் ஹிஜ்ரி 110லிருந்து 120க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்து விட்டார். இவர்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கிடையாது. இவர் அடுத்த தலைமுறையின் கடைசிப் படித்தரத்தில் உள்ளவராவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள்தான் அதனை அறிவிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தையே அடையாத ஒரு மனிதர் இது போன்ற சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். எனவே இது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த ஒரு செய்தியாகும். இது போன்ற செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நஜ்ரான் பகுதி கிறித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் வாதப் பிரதிவாதங்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் ஏனைய பல நூற்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் ஆதாரப் பூர்வமான எந்த அறிவிப்புகளிலும் நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று கூறப்படவில்லை.

இப்படி ஒரு சம்பவம் நபியவர்கள் காலத்தில் நடந்திருந்தால் பிரபல்யமான இந்தச் சம்பவத்தை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்திருப்பார்கள். அவை ஆதாரப்பூர்வமான நூற்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் எந்த ஒரு நபித்தோழருமே இதுபோன்ற ஒரு சம்பவத்தை அறிவித்ததாக எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்தச் சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்டதாக இருப்பதுடன் இது திருமறைக் குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதக் கூடியதாக அமைந்துள்ளது.

பள்ளிவாசல்கள் என்பது அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஆலயங்களாகும். அங்கு ஒரு போதும் அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படக்கூடாது என்பதுதான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! 

அல்குர்ஆன் 72:18

ஆனால் இந்த இறைக்கட்டளைக்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய பள்ளியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு அனுமதித்திருப்பார்களா?

மேலும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை  உடைக்கின்ற கேவலமான காரியத்தையும் செய்துள்ளார்.

முஸ்லிம் அல்லாத மக்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்முறையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு எத்தனையோ உண்மைச் சான்றுகள் இருக்கும்போது திருமறைக் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எதிரான இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களை எடுத்துக் கூற வேண்டியதன் அவசியம் என்ன?

 (பார்க்க: பிற மதத்தவர்களுடன் அன்பு).

இதை உண்மை என்று நம்பினால் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் இது போல் சிலை வணக்கத்தை அனுமதிக்குமாறு கடிதம் எழுதுவார்களா? அதிரையில் தவ்ஹீத் புரட்சியாளர்களால் (?) கட்டப்பட்டுள்ள பள்ளியில் இதை அனுமதிப்பார்களா?

உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதார்களா?

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதாகவும் ஒரு கட்டுக்கதை உள்ளது.

கலீபா உமர் காலத்தில் பாலஸ்தீனம் வெற்றிக்கொள்ளப்படுகிறது. வேதக்குறிப்புகளின்படி ஜெருசலேமின் சாவியை கலிபா உமரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, அவரை மதீனாவிலிருந்து ஜெருசலேமுக்கு வரவழைத்தப் பாதிரியார்கள் தொழுகை நேரத்தில் உயிர்த்தெழல் தேவாலயத்தில் உமரைத் தொழுமாறு கூறினர். "நான் இங்கு தொழுதால் எனக்குப் பின் வரும் தலைமுறையினர் எங்கள் தலைவர் தொழுத இடம் என உரிமை கோரலாம்' என்று கூறி அங்கே தொழுவதைத் தவிர்த்தார்கள்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த வரலாற்று நூற்களிலும் கூறப்படவில்லை. இது உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு கட்டுக் கதையாகும்.

உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாத மக்களிடம் எவ்வளவு நீதமாக, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான உண்மைச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக்கிய கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் ஏற்படும் என்று சபித்துள்ளார்கள்.

மேலும் சமாதிகளை நோக்கியும், உருவப்படங்களை நோக்கியும் தொழுவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இறைவனுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் நடைபெறும் இடங்களில் இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  : 

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!” என்று கூறினார்கள்.

நூல்  : புகாரி (1341)



நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, "யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441

கிறித்தவ ஆலயங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்குரிய இடம் அல்ல என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும்போது நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக உமர் (ரலி) தேவாலயங்களில் தொழலாம் என்றும் வேறு காரணத்திற்காக நான் தொழவில்லை என்றும் கூறியிருப்பார்களா? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட சம்பவம் உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட சம்பவம்தான் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

உமர் (ரலி) அவர்கள் ஸாம் நாட்டிற்கு வருகை தந்தபோது ஒரு கிறித்தவர் அவர்களுக்கு உணவைத் தயார் செய்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம் “நீங்களும் உங்களுடைய தோழர்களும் என்னிடத்திற்கு வருகைதந்து என்னை சங்கை செய்வதை நான் விரும்புகிறேன்“  என்று கூறினார். அவர் ஸாம் நாட்டிலுள்ள அந்தஸ்து மிகுந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவருக்கு கூறினார்கள் : நாங்கள் உங்களுடைய தேவாலயங்களில் உருவங்கள் இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அங்கே நுழைய மாட்டோம்” என்று கூறினார்கள்.

நூல் : பைஹகி (பாகம் 2 பக்கம் 270)

தான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் உண்மை என்று நம்பினால் அதை அவர் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். அதாவது கோவில்களிலும் தேவாலயங்களிலும் முஸ்லிம்கள் தொழலாம் என்று பத்வா கொடுப்பாரா? அது போல் நம்முடைய பள்ளிவாசல்களுக்குள் பிறமதத்தவர்கள் சாமி கும்பிடலாம் என்று பத்வா கொடுப்பார்களா? முஸ்லிம்களுக்கு இப்படி அறிவுறை கூறுவார்களா? நிச்சயமாக இப்படி இவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கருத்துச் சொல்ல முடியாது. தாங்கள் நம்பாத ஒன்றை ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்?

 முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கருத்தும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் அதற்கு மாற்றமான ஒரு கருத்தும் சொலவது பச்சை முனாபிக்தனம் அல்லவா?



கிறித்தவ ஆலயங்களில் தொழலாமா?

உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள். 

கிறித்தவ ஆலயங்களில் நுழைவதைக் கூட தவிர்த்துக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவது கூடும் என்பதை ஆதரிப்பதைப் போன்று நடந்திருப்பார்களா?

இதுபோன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றார்கள்.

நன்றி: ஆன்லைன் பீஜே (சில மாற்றங்களுடன்)

Tuesday, October 22, 2013

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?


தவ்ஹீத் போர்வையில் இருக்கும் சிலர் சமீபத்தில் நடத்திய மத நல்லிணக்க நிகழ்ச்சியில் 'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்காவிட்டால் இந்த உலகையே படைத்து இருக்க மாட்டான் என்ற இட்டுக்கட்ட பட்ட செய்தியை ஹதீஸ் என்ற பெயரில் எடுத்துக் கூறினார்கள்'. இது தவறு என்று பலருக்கு தெரிந்து இருந்தும், இதை தவறு என்று சொல்லவில்லை. இது பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழ்காணும் விளக்கம் வெளியிடப்படுகிறது.

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?

இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்கமாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா?

முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது. 

اللآلي المصنوعة - (1 / 249) 

وفضل شهر رمضان والشفاعة كلها لك حتى ظل عرشي في القيامة على رأسك ممدود وتاج الملك على رأسك معقود ولقد قرنت اسمك مع اسمي فلا أذكر في موضع حتى تذكر معي ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك علي ومنزلتك عندي ولولاك ما خلقت الدنيا موضوع أبو السكين وإبراهيم ويحيى البصري ضعفاء متروكون وقال الفلاس يحيى كذاب يحدث بالموضوعات 

الموضوعات لابن الجوزي - (1 / 290) 

ويحيى البصري متروكان. قال أحمد بن حنبل: حرقنا حديث يحيى البصري. وقال الفلاس: كان كذابا يحدث أحاديث موضوعة. وقال الدارقطني: متروك. 

இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர். 

تلخيص كتاب الموضوعات للذهبي - (1 / 37) 

195-حديث محمد بن عيسى بن حبان المدائني ثنا محمد بن الصباح ثنا علي بن الحسن عن إبراهيم بن اليسع عن العباس الضرير عن الخليل بن مرة عن يحيى البصري عن زادان عن سلمان قال أتى أعرابي جاف بدوي فذكر خبراً طويلاً سمجاً وآخره يا محمد لولاك ما خلقت الدنيا 

قال ابن الجوزي موضوع بلا شك ويحيى البصري تالف كذاب والسند ظلمة 

இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் 'லாயிலாஹ இல்லல்லாஹூ' என்பதுடன் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். ''இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் ''அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது சொர்க்கத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததாம். ''இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம். 

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டடுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர். 

மேலும் இந்த செய்தியின் கருத்து குர்ஆனுடன் முரண்படுகிறது. அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த உலகத்தை படைத்ததற்கான காரணத்தை பற்றி கூறும் போது அவனை வணங்குவதற்காகத் தான் இந்த உலகத்தை படைத்ததாக குறிப்பிடுகிறான். 

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51 

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. 

அல்குர்ஆன் (51:56) 

இறைவன் தன்னை வணங்குவதற்காகத்தான் மனிதனையும், ஜின்களையும் படைத்திருப்பதாக கூறிக்காட்டும் போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று கூறுவதாக சொல்லுவது இந்த வசனத்தோடு நேரடியாக மோதுகின்றது. எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.

எல்லாரையும் மேடை ஏற்றுவது எப்படி தவறாகும்? என்று கேட்டவர்கள் இப்போதாவது அது தவறு என்று புரிந்து கொண்டால் போதுமானது.