Thursday, October 30, 2014

சூனியக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் - வீடியோ

சூனியக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் - வீடியோ



Saturday, October 25, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 39) - விலையை ஏற்றி விடுதல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 39) - விலையை ஏற்றி விடுதல்


இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

திருக்குர்ஆன் 13:11

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ருக் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (விண்ணிலி ருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா? என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக! அவ்வாறில்லை! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

திருக்குர்ஆன் 3:123,124,125

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 3:160

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 5:11

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 5:67

ஆயினும் அவரை (நூஹை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

திருக்குர்ஆன் 7:64

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான். நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான். 

திருக்குர்ஆன் 8:9,10,11

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

திருக்குர்ஆன் 8:26

(முஹம்மதே!) அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடினால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியின் மூலமும், நம்பிக்கை கொண்டோர் மூலமும் உம்மைப் பலப்படுத்தினான்.

திருக்குர்ஆன் 8:62

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்;ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:40

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.

திருக்குர்ஆன் 10:103

நமது கட்டளை வந்த போது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.

திருக்குர்ஆன் 11:58

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

திருக்குர்ஆன் 11:66

நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 

திருக்குர்ஆன் 11:94

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்! என்றனர். நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம். அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).

திருக்குர்ஆன் 21:68,69,70,71

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.


திருக்குர்ஆன் 26:63,64,65,66

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.

மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.

மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.

இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.

மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். 

திருக்குர்ஆன் 39:13

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரீ 1445

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4661)

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.

அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!’ என்பதாகும்.

முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 12

இஸ்லாத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு முதலாவதாக, பசித்தோருக்கு உணவளித்தல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறுகின்றார்கள். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பாரபட்சம் இல்லை.

இரண்டாவதாக, முஸ்லிம், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்தைக் கூறி அமைதியைப் பரப்பச் சொல்கின்றார்கள்.

ஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருப்பார். அவரை நோக்கி, ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. ஒருவர் தனது குழந்தை இறந்து விட்ட சோகத்தில் இருப்பார். அவரிடமும், “உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. இப்படி இன்பம், துன்பம் என எந்த நிலையில் இருந்தாலும் அனைவர் மீதும் ஸலாம் எனும் அமைதியைப் பரப்பச் சொல்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 51

மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, புறையோடச் செய்து அவர்களது உயிர்களுக்கே உலை வைக்கின்ற கல், முள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஓரம்சம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கையே மற்றவர்களை இன்னல், இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது தான் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

காலைப் பதம் பார்க்கின்ற கல், முள்ளையே அகற்றச் சொல்லும் இஸ்லாம், ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2472

இப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகின்றான் என்றால், பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் குழுமுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான்? நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுதான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடாகும்.

ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

“முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: திர்மிதி 2551

“பிற மனிதனுக்கு உனது கையினால், நாவினால் இடைஞ்சல் அளிக்காமல் இருந்தால் நீ ஒரு முஸ்லிம்’ என்று கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அவ்வாறு சொல்லாமல், “மனிதர்கள் உன்னுடைய நாவினால், கையினால் பாதுகாப்புப் பெற வேண்டும்’ என்று சொல்கிறார்கள். உன்னிடமிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுவதை நீ தீர்மானிக்கக் கூடாது; ஏனெனில் நீ ஏற்படுத்திய பாதிப்பின் தன்மை உனக்குத் தெரியாது; பாதிக்கப்படுபவர் அல்லது மற்றவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

அந்த அளவுக்கு, ஒரு முஸ்லிம் தனது நாவினாலும், கையினாலும் பிற மக்களுக்குத் துன்பம் தரக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6018

அண்டை வீட்டுக்காரர் முஸ்லிமாகவும் இருக்கலாம்; முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். மொத்தத்தில் அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.

இறைவனுக்குப் பல அழகான பெயர்கள் உள்ளன. அவற்றில் “ஸலாம்’ என்பதும் ஒன்று. இதன் பொருள் அமைதியானவன் என்பதாகும். இறைவனின் திருப்பெயரும் அமைதியானவன் என்று அமையப் பெற்றிருக்கும் போது அமைதியான அந்த இறைவன் இந்த அமளி துமளிகளை எப்படி ஆதரிப்பான்?

அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.

அல்குர்ஆன் 10:25

மொத்தத்தில் இஸ்லாம் என்றால் உயிருக்கு உத்தரவாதம்! உடமைக்கு உத்தரவாதம்! கற்புக்குக் காவல் அரண்! பெண்களுக்குப் பாதுகாப்பு!

இஸ்லாம் என்றால் அமைதி! இஸ்லாம் என்றால் அபயம்!

இதனால் தான் இந்த மார்க்கத்தின் அதிபதி இதை ஓர் அமைதி மார்க்கம் என்று கூறுகின்றான்.

பாதுகாப்பான ஒரு வீட்டில் இருக்கும் போது அதில் வெயிலின் கொடூரம் கிடையாது. குளிரின் கொடுமை கிடையாது. கொட்டும் மழை கிடையாது. குலை நடுங்க வைக்கும் இடியோ, கண்ணைப் பறிக்கும் மின்னலோ இதில் தெரியாது. இவை அத்தனைக்கும் ஓர் இல்லம் பாதுகாப்பாக இருப்பது போல் ஒரு மனிதனின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இஸ்லாம் இருக்கின்றது. அந்தப் பாதுகாப்பு இல்லமான இஸ்லாம், ஒருபோதும் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஆதரிக்காது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்கின்றனர். அந்த அடிப்படையில், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயமோ, இஸ்லாமிய மார்க்கமோ பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இஸ்லாம் ஓர் ஆக்க சக்தி! அது அழிவு சக்தி அல்ல என்பதை நம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிடம் கொண்டு செல்வோம். சாந்தி, சமாதானம், ஆக்கம், அமைதி இவையே இஸ்லாம் என்பதை தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமின்றி தரணியெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

Wednesday, October 22, 2014

இலவச புக் ஸ்டால்

TNTJ வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் 15/10/2014 அன்று இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.இதில் மார்க்க விளக்க நூல்களும், "இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்" என்ற தலைப்பில் DVD யும், "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? " என்ற தலைப்பில் பிட்நோட்டிஸ்யும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்





அபுதாபியில் நடைபெற்ற அதிரை TNTJ கிளை'யின் அமீரக ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம்!

 அல்லாஹ்வின் பேரருளால்,
 
கடந்த 17-10-2014 வெள்ளிகிழமை அன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பின் மதியம் 2:00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் அமீரக ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில், துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகிய அனைத்து கூட்டமைப்புகளும் கலந்துக்கொண்டு கீழ்காணும் நிகழ்ச்சி நிரல்களை ஆலோசிக்கப்பட்டன.

6 மாதத்திற்கு ஒருமுறை இந்த அமர்வு ஏற்படுத்துவது. கடந்த கால செயல்பாட்டு அறிக்கைகளை ஒவ்வொரு கூட்டமைப்பும் வாசித்தனர்.

எதிர்கால திட்டங்கள் வாசிக்கப்பட்டன.தவ்ஹித் நூலகம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், பல முக்கிய தீர்மானங்கள் ஆலோசிக்கப்பட்டன.

இறுதியில், சகோதரர் பாரி (தாயி) அவர்களால் நல்லொழுக்க பயிற்சி நடத்தப்பட்டு, துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!












 

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்! - அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லிஸ் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியின் நாடகம்!!


புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும் ஹதீஸ்கள் மட்டுமே ஆகும். ஹதீஸ்கள் பல அறிஞர்களால் தொகுக்கப்பபட்டு, அவை பல்வேறு கிரந்தங்களாக உள்ளது. புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ என பல்வேறு கிரந்தங்கள் உள்ளன. அவற்றில் பல தற்போது தமிழ் மொழியிலும் வந்துள்ளன.

ஒரு முஸ்லிம் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஏற்று அதனை தமது வாழ்வில் செயல்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் கிரந்தத்தை மட்டும் தூக்கிபிடிப்பது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

நமது ஊர் ஜாவியா பள்ளிவாசலில் வருடா வருடம் புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் புகாரி ஹதீஸ் தொகுப்பில் உள்ள சில ஹதீஸ்களை மக்களுக்கு விளக்குகிறோம் என்ற பெயரில் யாருக்கும் புரியாத வகையில் விளக்குவார்கள். இவர்கள் நடத்தும் பயானில் எல்லா ஹதீஸ் கிரந்தங்களிலும் உள்ள முக்கியமான ஹதீஸ்களை விளக்கினால் இவர்களை சரி காணலாம். இவர்கள் அவ்வாறு செய்யாமல், புகாரி என்ற ஒரு கிரந்தத்தை மட்டும் முன்னிலைப்படுத்துகிறார்கள். சரி, அதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை என்பதை புகாரி ஹதீஸ் தொகுப்பில் இருந்து எடுத்துவைக்கும் ஹதீஸ்களை பார்த்தால் புரியும்.

புகாரி ஹதீஸ் தொகுப்பில் புகாரி மஜ்லிசை நடத்துபவர்களுக்கு எதிராக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை இவர்கள் வேண்டுமென்றே மக்களுக்கு விளக்காமல் தவிர்க்கிறார்கள்.

மேலும், நமது ஊரில் புகாரி மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்ட பிறகு காலாரா நோய் ஓடிவிட்டது என்ற ஒரு பொய்யையும் சேர்த்து சொல்லி வருகிறார்கள்.

ஒருவருக்கு நோயை தருவதும் அல்லாஹ்,நோயை அகற்றுவதும் அல்லாஹ் என்று ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். நோய் நல்லவர்களுக்கும் வரும் தீயவர்களுக்கும் வரும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் காலரா நோய் நுழையாது என்று முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். புகாரி ஹதீஸ் மஜ்லிஸ் நடத்தினால் காலரா வராது என்று எந்த ஹதீஸூம் இல்லை. இவர்களின் இந்த கப்சாவை நாம் நம்பினால், இன்று பெரும்பாலான ஊர்களில் காலரா நோய் வருவது இல்லை, எனவே அங்கு எல்லாம் புகாரி மஜ்லிஸ் நடத்தினார்களா? என்று கேட்க வேண்டிவரும்.

மேலும், நமது ஊரில் நடக்கும் புகாரி மஜ்லிஸில் தப்ரூக் என்று நார்சா வழங்கப்படுகிறது. இவற்றை மக்கள் தங்களது செலவில் கொடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் நேர்சையாக தான் தப்ரூக் வழங்குகிறார்கள். தங்களது நேர்ச்சைகளில் சேவல், கோழி போன்றவற்றையும் மக்கள் வழங்குகிறார்கள். அல்லாஹ் அல்லாதவர்களின் மீது நேர்ச்சை செய்வது இணை வைப்பாகும். நேர்ச்சையினால் தப்ரூக் என்ற நார்சா வழங்குபவர்களும் சேவல் கோழி போன்றவற்றை வழங்குபவர்களும் அல்லாஹ்விற்கு தான் நேர்ச்சை செய்து வழங்கிறார்களா? என்பது கேள்விக்குறியே!

கீழ்காணும் ஹதீஸ் நேர்ச்சை செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறார்கள்.

புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா எனக் கேட்டார்கள். இல்லை என்று நபித்தோழர்கள் விடையளித்தனர். அறியாமைக் கால திருவிழாக்கள் ஏதும் அங்கே நடக்குமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும் தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்: அபூதாவூத்

குர்ஆன் ஹதீஸ்களுக்கு நேர் முரணாக புகாரி மஜ்லிசை நடத்துத்துபவர்கள் (சுன்னத் வல் ஜமாஅத்தினர்) போற்றி புகழும் அறிஞர்களின் கருத்துகள் இருந்தாலும், அவற்றை தூக்கிவிசி விட்டு, குர்ஆன் ஹதீஸின் கருத்துகளை இவர்கள் ஏற்பார்களா? என்றால் இல்லை என்பதை தான் இவர்களின் செயல் நிருபித்து வருகிறார்கள்.

இவர்கள் புகாரி ஹதீஸ் தொகுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் உள்ள ஹதீஸ்களையாவது தங்களின் சொல்லிலும் செயலிலும் காட்டுவார்களா? என்றால் அதுவும் இல்லை என்பதை புகாரி ஹதீஸ் தொகுப்பில் இடம்பெறும் கீழ்காணும் ஹதீஸ்களை படித்தால் புரியும். நாம் யாரை குறிப்பிட்டு இந்த வாதத்தை வைக்கிறோம் என்றால்  பொதுமக்களை பார்த்து அல்ல. புகாரி மஜ்லிசை நடத்துபவர்களையும் அதில் சொற்பொழிவாற்றுபவர்களையும் நோக்கி தான் நமது கேள்விகள்!

குறிப்பு: இவர்களிடம் உள்ள வழிகேட்டை நிரூபிக்க குர்ஆனிலும் புகாரி உள்பட மற்ற ஹதீஸ் கிரந்தங்களிலும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நாம் இங்கே அடுக்கவில்லை. காரணம், புகாரி ஹதீஸ் தொகுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழச்சி நடத்துவதால், புகாரியில் உள்ள ஹதீஸ்களையாவது செயல்படுத்துங்களேன் என்று கேட்பதற்காகவும், இவர்களுக்கு எதிராக புகாரியில் உள்ள ஹதீஸ்களை இவர்கள் மக்களிடம் மறைக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவும் தான் இந்த ஆக்கம்.

இணைவைப்பு என்ற ஒரு கொடிய பாவம்:

இணைவைப்பு என்பது கொடிய பாவம். தர்ஹாவில் அவ்லியாக்களிடம் கேட்பது இணைவைப்பு என்று என்றைக்காவது புகாரி மஜ்லிஸில் கேட்டது உண்டா? அடக்கஸ்தலங்களை வணங்கும் இடமாக ஆக்க கூடாது என்றும், அடக்கஸதலங்களை வணக்க தளங்களாக மாற்றிய யூத நஸராக்களின் மீது சாபம் உண்டாவது போல், கப்ரை வணங்கபவர்கள் மீதும் உண்டாகும் என்று என்றாவது புகாரி மஜ்லிஸில் கேட்டது உண்டா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூத, நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக்கொண்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 1330

தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரீ (4477)

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

'எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 4497

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (6:82) என்ற வசனம் இறங்கியதும், 'அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியும்?' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் ' (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 32, 3360, 3428, 3429, 4629, 4776, 6918

ஆயிரம் முறை அழைத்தால், அப்துல் காதர் ஜெய்லானி நேரில் வந்து ஆஜர் ஆவார் (சம்மன் இல்லாமல்) என்று மக்களை வழிகேடுப்பவர்களே? என்று நீங்கள் திருந்த போகிறீர்கள். 

நபி (ஸல்) அவர்களை கூட வரம்பு மீறி புகழக்கூடாது!

நபி (ஸல்) அவர்கள் தன்னை வரம்பு மீறி புகழக்கூடாது என்று சொன்ன ஹதீஸ் புகாரி தொகுப்பில் இருந்தபோதும், நபி (ஸல்) அவர்களை பாவங்களை மன்னிக்க கூடியவரே என்றும், துன்பங்களை அகற்ற கூடியவரே என்றும் மௌலுது பாடல்களை பாடி, இந்த ஹதீசை புறம் தள்ளுவது சரியா?

'கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்' என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி
நூல்: புகாரி 3445, 6830

பித்அத் (நூதனம் - மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட) நிராகரிக்கப்படும்:

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனைத்தும் வழிகேடு, அது நரகில் சேர்க்கும் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு சொல்லுகிறது. இது புகாரியில் தான் இடம்பெற்றுள்ளது.

இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதை மறைத்து, கூட்டு துஆ, திருமணத்தில் அல்லிகு பயனகூகுமா என்ற துஆ, 3ஆம் பாத்திஹா, 7ஆம் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹா, புரியாம் பாத்திஹா, ஸலாத்துன் நாரியா, மிராஜ் நோன்பு, பராஆத் நோன்பு என ஆயிராக்கணக்கான பித்அத்தை புகாரி மஜ்லிசை நடத்துபவர்கள் தடுக்காமல், அதை செய்யபவர்களாகவே இருக்கிறார்களே? பொதி சுமக்கும் கழுதைகள் என்று குர்ஆன் கூறுவது இவர்களை தானே?

'நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்' எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி),
நூல்கள்: புகாரி 2697

தொழுகைக்கு நபி (ஸல்) அவர்களே முன்மாதிரி:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் எவ்வாறு ஒவ்வோரு செயலையும் செய்தார்கள் என்று தெளிவாக ஹதீஸ்கள் இருக்க, ஷாபி சொன்னார், ஹனஃபி சொன்னார் என்று நபி (ஸல்) அவர்களின் ஹதீசை புறம்தள்ளி, ஷாபி, ஹனஃபி போன்ற மனிதர்களின் சொல்லை இறைவாக்காக நினைத்து, அதை தொழுகையில் செய்வது சரியா?

'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' எனக் கூறி அனுப்பினார்கள்.

நூல்: புகாரி 631, 6008, 7246

நேர்ச்சை யாருக்கு?

பல அரியாத மக்கள் அவ்லியாக்கள் எனப்படுவோரின் பெயரால் நேர்ச்சை செய்கிறார்கள். புகாரிலேயே அல்லாஹ்விற்கு மட்டும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்றும், வேறு யாருக்கும் நேர்ச்சை செய்யக்கூடாது என்றும் ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீசை என்றாவது விளக்கி சொல்லக் கேட்டுயிருக்கிறீர்களா? புகாரி மஜ்லிஸிற்கு வரும் கோழிகளில் பல அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்யப்பட்டது என்பது ஊர் அறிந்த ரகசியம்.

"யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவுசெய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ,அதை நிறைவேற்றலாகாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696

தராவீஹ் தொழுகை உண்டா?

தராவீஹ் என்ற ஒரு தொழுகை கிடையாது என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இதையும் நாம் மதிக்கும் ஆலிம்கள் (?) புகாரி மஜ்லிஸில் விளக்கவில்லை.

'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்: புகாரீ 1147, 2013, 3569

பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கக்கூடாது!

பெண்கள் பள்ளக்கு வருவதை தடுக்கககூடாது என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா?

மூத்திரத்தால் சூரத்துல் பாத்திஹாவை எழுதச்சொல்லும், மத்ஹபு குப்பைகளை தூக்கபிடிக்கும் ஹைதர் அலி ஆலிம்சா (?) அவர்கள் இந்த ஹதீசை என்றாவது படித்துயிருப்பாரா?

"பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி 900, 873, 5238)

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: புகாரி 865, 899)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

(நூல்: புகாரி 578, 372, 867, 872)

பெற்றோரின் நேர்ச்சையை பிள்ளைகள் நிறைவேற்றுவது:

ஒருவர் மரணித்துவிட்டால், மரணம் அடைந்த வீட்டில் சோகம் குறைவதற்கு முன், எங்களுக்கு சோறு போடு என்று பிச்சை கேட்கும் ஆலிம்சாக்களே! நீங்கள் இஸ்லாத்தையா? பின்பற்றுகிறீர்கள்? நபி (ஸல்) மரணம் அடைந்தவரின் வீ ட்டிலுள்ளவர்கள், சோகத்தில் இருப்பார்கள். எனவே, அண்டைவீட்டார்கள் அவர்களுக்கு சமைத்து கொடுங்கள் என்று சொன்ன ஹதீசை கேள்விபட்டுயிருக்கிறீர்களா? நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றினால் தானே, எங்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று  நீங்கள் (ஆலிம்சாக்கள்) நினைக்கலாம். நீங்கள் நினைப்பது சரி தான், உங்களிடம் இந்த கேள்வியை கேட்கக்கூடாது தான், இருந்தாலும் சில அப்பாவிகள், நீங்கள் தான் இஸ்லாத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் என்று நினைக்கிறார்களே!

சரி, இஸ்லாத்தில் இல்லாத 3ஆம் பாத்திஹா, 7ஆம் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹாவை செயல்படுத்தும், புகாரி மஜ்லிஸினர், பெற்றோர்கள் ஏதேனும் நேர்ச்சை செய்து, அதை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டால், அதை அவர்களின் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கீழ்காணும் ஹதீசை என்றாவது புகாரி மஜ்லிஸில் விளக்கியிருக்கிறார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் மீது ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றலாமா?' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம், அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள். மற்றொரு அறிவிப்பில் பதினைந்து நோன்பு எனக் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1953

இஸ்லாத்தில் துறவறம் இல்லை:

கீழ்காணும் ஹதீசை எடுத்துக்காட்டி, 4 மாதம், ஒரு வருடம் என குடும்பத்தை கவனிக்காமல், பெட்டியை தூக்கும் தப்லீக்வாதிகளுக்கு அது தவறு என்று விளக்கியது உண்டா?

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5063

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம்:

பெண்களின் சம்மதம் இல்லாமல் நமதூரில் எத்தனை திருமணங்கள் நடக்கின்றன. இதனால், திருமணம் நடந்த பின், சிறிது காலத்திலேயே எத்தனை விவாகரத்துகள் நடக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி, கன்னிப்பெண்ணாக இருந்தாலும், விதவை பெண்ணாக இருந்தாலும், தனக்கு தேர்வு செய்யப்படும் மணமகனை தனக்கு பிடித்துயிருக்கிறதா? என்ற சம்மத்தை பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும் என்று புகாரி மஜ்லிஸினர் என்றாவது கூற கேட்டது உண்டா?

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969

திருமண விருந்தை (வலிமா) மணமகனே கொடுக்க வேண்டும்:

திருமணத்தில் மணமகளின் வீட்டினரிடம் வண்டி வண்டியாக சாப்பாடு வாங்கிறார்கள் நமதூரில். கீழ்காணும் ஹதீஸ் மணமகன் தான் வலிமா கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா? நமது கண்ணியமிக்க ஆலிம்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நல்ல காலம் கெட்ட காலம் இல்லை:

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கும் பழக்கம் இன்று தவ்ஹீத் எழுச்சியால் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இன்றும் சிலர் நல்ல காலம் கெட்ட காலம் பார்க்க தான் செய்கிறார்கள். வேதனை என்னவெனில், நல்ல காலம் கெட்ட காலத்தை பார்த்து கொடுப்பதே ஆலிம்கள் என்ற கல்ல பேர்வழிகள் தான். கீழ்காணும் ஹதீஸ்கள் என்றாவது விளக்கப்பட்டு இருக்குமா?

ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4826, 6181, 7491

திருமணத்தில் ஒதப்பட வேண்டிய துஆ என்ன?

திருமணத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத அல்லிகு பயனகுமா என்று ஆரம்பாமாகும் ஒரு துஆவை நமது கண்ணியமிக்க (?) ஆலிம்கள் ஒதிவருகிறார்கள். அந்த துஆவில் பல நபிமார்களுக்கு மனைவியாக குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படாதவர்களை இவர்களே மனைவியாக கற்பனை செய்து சொல்லுகிறார்கள் (உதாரணத்திற்கு, யூசுஃ நபியின் மனைவியாக சுலைஹா என்ற பெண்னை). பித்அத்தை சப்பை செய்த இவர்கள், திருமணத்தில் மணமக்களுக்காக ஒத வேண்டிய துஆவை என்றாவது விளக்கியிருக்கிறார்களா?

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் - புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள்.

புகாரி 5155, 6386

சிறுவர்களுக்கு ஸலாம் சொல்லுவதை வழக்கமாக கொண்ட நபி (ஸல்) அவர்கள்:

நமது ஊரில் ஆலிம்கள் எனப்படுவோர் சிலர், நாம் ஸலாம் சொன்னால் கூட. சரியான முறையில் பதில் அளிப்பது இல்லை. காரணம், அகம்பாவம். ஆனால், நபி (ஸல்) சிறுவர்களுக்கு கூட ஸலாம் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஹதீஸ் விளக்கப்பட்டுள்ளதா?

(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாபித் அல்புனானீ (ரஹ்)
நூல் : புகாரி (6247)


ஸஹருக்காக பாங்கு:

கீழே உள்ள ஹதீசை படித்தால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆம், கீழ்காணும் ஹதீசை வைத்து தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுகிறது. இதை எதிர்க்காத ஆள் இல்லை. தப்லிக் ஜமாஅத்தினர், போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர், உலக பிறை நேசர்கள். கள்ள தவ்ஹீத் இயக்கங்கள், தடம்புரண்ட ஜாக், அரசியிலில் போய் நாறிப்போனவர்கள், வரதட்சனை திருமணத்தில் மூக்குபிடிக்க திண்றுவிட்டு தவ்ஹீத் பேசும் உத்தம புத்திரர்கள், நாள்தோறும் இணைவைப்பு காரியங்களை அரங்கேற்றும் இயக்கத்தில் இருந்து கொண்டு அவர்களை தவ்ஹீத் என்று பொய் சாட்சியம் கூறும் பழைய தவ்ஹீத்வாதிகள், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கீழ்காணும் ஹதீஸின் அடிப்படையில் ஸஹர் பாங்கு சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் எந்த அளவுக்கு குர்ஆன் ஹதீஸூக்கு முக்கியத்துவம் தருகிறது என்று விளங்கும்

இந்த ஹதீசை புகாரி மஜ்லிஸில் கண்டது உண்டா? கேட்டது உண்டா?

'(ரமலானில் விடிவதற்கு முன்) இரவிலே பிலால் பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள். பருகுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 617

சூரியன் மறைந்தவுடன் விரைந்து நோன்பு திறக்க வேண்டும்:

சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறங்கள் என்று தவ்ஹீத் பள்ளியில் பாங்கு சொன்னால், பள்ளியை கொளுத்துவோம் என்கிறார்கள். ஆனால், புகாரியிலேயே அவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது. இப்போ, யார் ஹதீசை பின்பற்றுகிறார்கள்? சுன்னத் வல் ஜமாஅத் என்போர் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று இது காட்டவில்லையா?

நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 1957

இந்தத் திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து, அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1954


வலியுறுத்தப்பட்ட சுன்னத் தாடி!

தாடி வைப்பதின் முக்கியத்துவத்தை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு காட்டுகிறது. ஆனால், நமது குட்டி முல்லாக்கள் இந்த ஹதீஸ்களை மக்களுக்கு காட்டாமல், மார்க்கத்தில் இல்லாத தொப்பி அணியாமல் பள்ளிக்கு வந்தால், விட மாட்டேம் என்று அப்பாவிகளை எழுதி போட வைத்தது யார்? இந்த கண்ணியமிக்க உலமாக்கள் தானே?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்போருக்கு மாறு செய்யுங்கள். தாடியை வளர விடுங்கள். மீசையை கத்தரியுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5892

லைலத்துல் கத்ர் ரமலானில் கடைசி பத்தில் ஒற்றை படையில் வரும்:

லைலத்துல் கத்ர் ரமலானில் கடைசி பத்தில், ஒற்றை படையில் தான் வரும் என்கிறது கீழ்காணும் ஹதீஸ் (புகாரியில் உள்ளது). ஆனால், நமதூரில் உள்ள ஆலிம்களுக்கு மட்டும் தனியாக வஹி வந்ததோ என்னவோ தெரியவில்லை. 27ஆம் இரவு மட்டும் லைலத்துல் கத்ர் வரும் என்ற நினைப்பில், தமாம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற நீண்ட துஆ என்ற பெயரில் குர்ஆன் வசனங்களை ஒதி, பெரிய துஆ ஓதுகிறோம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்த ஹதீசை விளக்குவது எப்போது?

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2017, 2020

27 ஆம் இரவு, 28 ஆம் இரவு, 29 ஆம் இரவுகளில் தமாம் என்ற பெயரில் மல்லிக்கை பூ தோரணம் கட்ட புகாரியில் எதேனும் ஹதீஸ் உள்ளதா? 

மாதவிடாய் பெண்கள் உள்பட அனைவரும் பெருநாள் தினத்தில் மைதானத்திற்கு வரவேண்டும்!

பெருநாள் தொழுகையை மைதானத்தில் தான் தொழ வேண்டும் என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இது புகாரியில் தான் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 971

மேலே சொல்லப்பட்ட ஹதீஸ்களை படித்தால், இரு உண்மைகள் புரியும். ஒன்று, சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர், நபி (ஸல்) அவர்களின் சுன்னத் பின்பற்றுவர்கள் அல்ல என்பது. இரண்டு, குழப்பவாதிகள் என்று அவப்பெயர் சூட்டப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துகளை எத்தகைய தடையையும் மீறி பின்பற்றுகிறார்கள் என்று.

மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ்களுக்கு, அதை இப்படி புரியக்கூடாது என்று அப்படி தான் புரிய வேண்டும் என்று கண்ணியமிக்க ஆலிம்களோ அல்லது அவர்களுக்கு கூஜா தூக்கபவர்களோ  கூறினால், தவ்ஹீத் ஜமாஅத்துடன் இது சம்பந்தமாக விவாதிக்க வரும்படி அழைக்கிறோம். விவாதத்தில் உங்கள் வண்டவாலங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும், இன்ஷா அல்லாஹ் (ஏற்கனவே, பல முறை தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்).

நாம் குறிப்பிட்டுள்ள போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரை ஆதரிக்கும் அக்மார்க்(?) தவ்ஹீத்வாதிகளும் சிந்திக்க வேண்டும்.

இறுதியாக, புகாரி மஜ்லிசை முன்னின்று நடத்தும் கேரளத்து ஆலிம்சா எந்த அளவுக்கு நபி வழியை பின்பற்றுகிறார் என்பதையும் சேர்த்து விளக்க வேண்டியுள்ளது.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

நூல்கள் : அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரும் எழுந்து கூட நிற்க கூடாது என்றார்கள். பல நேரங்களில், நபி (ஸல்) அவர்களை முதல் முறையாக பார்க்க வந்த பலர், யார் முஹம்மது என்று கேட்கும் அளவுக்கு, நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். ஆனால், கேரளத்துகாரர் தான் ஜூம்ஆ தொழ செல்லும் போது, மார்க்கம் தெரியாத அப்பாவி மாணவர்களை தனக்காக குடைபிடித்து வர செய்கிறார். இரண்டு மூன்று மாணவர்கள் கேரளத்துகாரரை குடைக்குள் வாரம் வாரம் ஜூம்ஆ தொழ அழைத்து வருகிறார்கள் . எதற்கு குடை பிடிக்கணும், வார வாரம் நமது ஊரில் மழை பெய்கிறதா? என்று நீங்கள் கேட்கலாம். அந்த குடை மழைக்காக அல்ல, வெயில்பட்டால் கறுத்து போய்விடுவார் அல்லவா? அதற்காகத்தான் குடை. மேலும், கேளரத்துகாரர், தொழும் பள்ளிக்கு சென்று, அவர் செருப்பை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். தொழுக சொல்லும் போது செருப்பு மேற்கு திசையை நோக்கி கழட்டப்பட்டு இருக்கும், தொழுது முடித்த பிறகு அதே செருப்பு கிழக்கு திசையை நோக்கி திரும்பி இருக்கும். எப்படிங்க இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று நீங்கள் கேட்கலாம். இது அதிசயமும் இல்லை அற்புதமும் இல்லை. அந்த கேரளத்து மார்க்க அறிஞருக்காக (?) அவரின் மாணவர்கள் செய்யும் சேவை. எந்த அளவுக்கு நபிவழியை பின்பற்றுகிறார் பார்த்தீர்களா?

முதலில் வருபவருக்கு தான் பள்ளியில் முதல் வரிசையில் இடம். ஆனால், கேளரத்துகாரர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து முதல் சஃபில் (வரிசையில்) இடம் பிடித்துவிடுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அமர்ந்து இருப்பவரை எழுப்பி விட்டு, அந்த இடத்தில் அமர வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 626

எந்த ஒரு சபையிலும் ஒருவரை எழுப்பிவிட்டு அமர கூடாது என்கிறது மேல் உள்ள புகாரி ஹதீஸ். கேரளத்துக்காரர் குர்ஆன் ஹதீசை பின்பற்றவில்லை என்று புரிகிறதா? இன்னும் இல்லை என்றால் உங்களுக்கு ஏதே பிரச்சினை இருக்கிறது.

இந்த புகாரி மஜ்லிஸில் நடைபெறும் பள்ளியில் அஹ், அஹ் என்று திக்ரு செய்வதற்கு எதோனும் ஹதீஸ்கள் புகாரி உண்டா? சத்தம் போட்டு திக்ரு செய்வதற்கும், ஆடி கொண்டு திக்ரு செய்வதற்கும் ஏதோனும் ஹதீஸ்கள் புகாரியில் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்.

பக்கசார்பு இல்லாமல் நாம் எடுத்து வைத்துள்ள வாதங்களை பார்த்தால், தவ்ஹீத் ஜமாஅத் தான் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத் என்பதும். சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ளவர்கள் சுன்னாவை பின்பற்றுபவர்கள் அல்ல என்பதும் தெளிவாகும்.

எனவே, முன்னோர்கள் சொன்னார்கள், மூதாட்டிகள் சொன்னார்கள் என்ற மாயையை விட்டுவிட்டு, குர்ஆன் ஹதீசை மட்டும் பின்பற்றி, மறுமையில் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவர்கள் நடத்தும் புகாரி மஜ்லிஸ் என்பது வயிறு நிரப்ப தான் என்பதை மேலே உள்ள ஹதீஸ்களை படித்தால் விளங்கும்.

"அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

                                                                                      அல்குர்ஆன் 2:170

Tuesday, October 21, 2014

திருமண விருந்திற்குரிய அளவு என்ன?


திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா?

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன? திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம்.

அதற்கான விளக்கங்களை அளிப்பதற்காக இந்தக் கட்டுரை! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமண விருந்தின் உச்சக்கட்டம் என்பதற்கு எவ்வித அளவு கோலையும் நிர்ணயம் செய்யவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) எதற்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கவில்லையோ அதற்கு நாம் எந்த எல்லையையும் நிர்ணயிக்க முடியாது. அதே நேரத்தில் திருமண விருந்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நபியவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது.

இந்த விருந்து நபிவழியாகும். பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபியவர்கள் வழங்கிய அனைத்து திருமண விருந்துகளையும் மிக மிக எளிமையாகத் தான் வழங்கி நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் இதுதான் பெரிய விருந்தாகும். ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் திருமணம் என்ற காரியத்தில் விருந்தளிக்கும் போது நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் விருந்தளிப்பது தான் மிகச் சிறந்ததாகும்.

நபியவர்கள் எதனை முன்மாதிரியாக வழிகாட்டிச் சென்றுள்ளார்களோ அதில்தான் இச்சமுதாயத்திற்கு நன்மை இருக்கிறது. எனவே அதைத் தான் நாம் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், வலியுறுத்த வேண்டும் என்பதே நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அதிகம் செல்வ வசதியுடையவர் திருமணம் அல்லாத காரியங்களில், மார்க்கத்தின் வரம்புகளை மீறாமல், வீண்விரையம் இல்லாமல் அதிகமானவர்களுக்கு விருந்தளித்தால் அதனை நாம் தவறு என்று கூறமாட்டோம்.

ஆனால் திருமண விருந்தில் நபியவர்கள் எளிமையைக் கடைப்பிடித்துள்ளதால் அதையே செல்வந்தரும், ஏழைகளும் கடைப்பிடித்து நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என்றே நாம் கூறுகிறோம். எவ்வளவு வசதியிருந்தாலும் செல்வந்தர்கள் எந்த விருந்தும் கொடுப்பதே கூடாது என்பது நமது நிலைப்பாடல்ல.

மாறாக செல்வந்தராக இருந்தாலும் திருமண விருந்தில் எளிமையைக் கடைப்பிடித்து நபிவழியில் மிகச் சிறந்த முறையை சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதே நம்முடைய ஆவல்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமண விருந்து

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிகப் பெரிய அளவில் திருமண விருந்து அளிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது நடந்த சம்பவங்களை நாம் தெளிவாக அறிந்து கொண்டால் அவர்களின் கருத்திற்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

1. நபியவர்கள் வலீமா விருந்தாக ஒரு ஆட்டை அறுத்து, அத்துடன் ரொட்டியையும் அளித்தார்கள்.

2. உம்மு சுலைம் அவர்கள் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய "ஹைஸ்'' என்ற பலகாரத்தின் மூலம் நபியவர்கள் செய்த அற்புதம்.

உம்மு சுலைம் நபியவர்களுக்காக மட்டும் சிறிதளவு அன்பளிப்பாக வழங்கிய "ஹைஸ்'' என்ற பலகாரத்தில் இறைவனுடைய ஆற்றலினால் நபியவர்கள் நிகழ்த்திய அற்புதத்தில் தான் நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் உணவருந்திருனார்கள். இது வலீமா விருந்து அல்ல. நபியவர்கள் கொடுத்த வலீமா விருந்து மிகவும் எளிமையாகத் தான் நடைபெற்றது.

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிக எளிமையாகத் தான் வலீமா விருந்த வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

அதே நேரத்தில் நபியவர்கள், ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த நாளன்று மற்றொரு அற்புதம் நடக்கிறது. அதில் தான் முன்னூறுக்கும் அதிகமான ஸஹாபாக்கள் விருந்து சாப்பிட்டார்கள். அதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்து, தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "ஹைஸ்' எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, "அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார்.

அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்'' என்றார்கள். அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, "என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார்.

அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்'' என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (ஓரிடத்தில்) வை'' என்று கூறிவிட்டு, "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!'' என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள்.

அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும், நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன். -இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு, "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்'' என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.- (தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு'' என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்'' என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர். ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.

அப்போது, "அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு'' என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.

நூல் முஸ்லிம் (2803)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் "ஹைஸ்' எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். (அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)'' என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள். நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.

நூல்: முஸ்லிம் (2804)

நூற்றுக்கணக்கான ஸஹாபாக்கள் சாப்பிட்டது வலீமா விருந்தில் அல்ல. மாறாக நபியவர்கள் "ஹைஸ்'' என்ற பலகாரத்தின் மூலம் நிகழ்த்திய அற்புதத்தில் தான். "ஹைஸ்'' என்பது கெட்டியான பால், பேரீத்தம் பழம் மற்றும் நெய் மூலம் தயாரிக்கப்படும் உணவாகும்.

பல அறிவிப்புகளில் வலீமா விருந்து சம்பவமும், ஹைஸ் என்ற அற்புத உணவு விருந்து சம்பவமும் கலந்து வந்துள்ளதால் அதிகமானவர்கள் கலந்து கொண்டது வலீமா விருந்து தான் என்ற குழப்பம் ஏற்பட்டதற்கு காரணமாகும்.

நாம் இரண்டு நிகழ்வுகளையும் பிரித்து விளங்கிக் கொண்டால் எவ்வித குழப்பமும் இல்லை. நபியவர்கள் அற்புதம் அல்லாத முறைகளில் இருந்து நமக்கு மார்க்கமாக வழிகாட்டியவை தான் நமக்கு முன்மாதிரியாகும். அது போன்று நபியவர்களுக்கு மட்டும் இறைவன் பிரத்யேகமாக வழங்கிய சட்டங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

நபியவர்கள் அற்புதங்களாகச் செய்தவை மக்கள் தம்முடைய இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காகத் தானே தவிர அதிலிருந்து நடைமுறை வாழ்க்க்கைக்குச் சட்டம் எடுப்பது கூடாது.

ஒரு வாதத்திற்கு அப்படி எடுக்கலாம் என்றால் நபியவர்கள் எப்படி ஒரு சிறிய அளவு உணவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவளித்தார்களோ அது போன்று நாமும் சிறிய அளவிலிருந்து உணவளிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்வது சாத்தியமா? நான் அற்புதத்தின் போது இருந்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

உணவின் அளவை கவனத்தில் கொள்ளமாட்டேன் என்பது மடமைத்தனம் ஆகும். அற்புதம் என்பது இறைவனின் உதவியால் செய்வதாகும். அதில் இறைத்தூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.

(அல்குர்ஆன் 13:38)

எனவே 300 பேருக்கு நபியவர்கள் உணவளித்தது இறைக்கட்டளைப்படி நபியவர்கள் செய்ததாகும். அல்லாஹ் இலட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று அந்த அற்புதத்தின் போது கட்டளையிட்டிருந்தால் நபியவர்கள் இலட்சம் பேருக்கு அளித்திருப்பார்கள். நபியவர்கள் செய்த அற்புதங்களில் நாம் பின்பற்றுவதற்குரிய முன்மாதிரியை எடுப்பது கூடாது. அற்புதம் என்பது அதைக் காணும் மக்கள் நம்பிக்கை கொள்வதற்காகத் தான்.

அற்புதங்களிலிருந்து பின்பற்றுவதற்குரிய சட்டங்களை எடுத்தால்... ஒரு கோப்பை பாலில் 70 பேருக்குப் புகட்ட வேண்டும். இது நம்மால் சாத்தியமா? விரலிலிருந்து தண்ணீரை ஓடச் செய்து நூற்றுக்கணக்கானவர்கள் உளூச் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா? இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே நபியவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்து வைத்தது தான் வலீமா விருந்தாகும். அதில் தான் நமக்கு முன்மாதிரி உள்ளது. எனவே நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி நமது திருமணங்களையும், திருமண விருந்தையும் அமைத்துக் கொள்வோமாக! அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!

மனோ இச்சைகளை மார்க்கமாக்குவதிலிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

நன்றி : ஆன்லைன் பீஜே கேள்வி பதில்

மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்


'வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27)

தற்போது உலகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பல இடங்களில் புயல் காற்று, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, புவி அதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவையும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதுடன், வீடு வாசல்களையும் இழந்து தவிக்கிறார்கள்.

இப்படியான நேரத்தில் சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.

ஆனால் இப்படியான நேரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக சொல்லித் தந்துள்ளது. மார்க்கம் காட்டிய அடிப்படையில் நாம் நடக்கும் போது மழை காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவதுடன் மார்க்கத்தின் கட்டளைகளையும் பின்பற்றிய நன்மையை பெற்றுக் கொள்ள முடியும்.

இரண்டு நேரத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்திலும், மஃரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்திலும் தொழ முடியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

வகீஉ என்பவரின் அறிவிப்பில்இ நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் 'தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல் : முஸ்லிம் (1272)

லுஹரையும், அஸரையும் சேர்த்து ஒரு நேரத்திலும், மஃரிபையும், இஷாவையும் சேர்த்து ஒரு நேரத்திலும் நபியவர்கள் தொழுததாக குறிப்பிடும் மேற்கண்ட செய்தியில். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அச்சமோ மழையோ இருக்கவில்லை என்பதிலிருந்து அச்சம் அல்லது மழை இருந்தால் மாத்திரம் தான் நபியவர்கள் சேர்த்துத் தொழுவார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

மதீனாவில் இப்படி செய்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் பயணிகளாக இல்லா விட்டாலும் ஜம்மு செய்து தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம்.

கடமையான தொழுகைகளை வீட்டிலும் தொழுது கொள்ள முடியும்

மழை பெய்யும் நேரத்தில் கடமையான தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து நிறைவேற்றாமல் வீட்டிலேயே தொழுது கொள்வதற்கும் மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு 'ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்' (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், '(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் 'ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்' என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்' என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : புகாரி (666)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் தான் மக்கள் கூட்டாகத் தொழுது வந்தனர். தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே சாதாரண நேரங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மழை நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்றால் கடமையான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டியதில்லை என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.

எனவே மழைநேரத்தில் வீடுகளில் கடமையான தொழுகைகளைத் தனியாகவும் தொழுது கொள்ளலாம். வீட்டில் உள்ள நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் நிறைவேற்றலாம். என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இழப்புகள் ஏற்படும் போது என்ன செய்வது?

மழையின் காரணமாக வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு அழிவுகள், இழப்புகள் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் நாம் படைத்த இறைவனை மறந்து அவனுடைய வழிகாட்டல்களுக்கு மாற்றமாக நடக்கக் கூடாது. மாறாக இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீஜகுஸ முஸீப(டீஸ(த்)தி வ அக்லிப்ஜகுஸ லீ கைரன் மின்ஹா.

இதன் பொருள் :

நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.

(ஆதாரம்: முஸ்லிம் 1525)

மழை பொழியும் போது என்ன செய்வது?

மழை பெய்யும் போது ஓதுவதற்குறிய ஒரு துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் அந்த துஆவை ஓதும் போது நாம் மழையின் மூலமாகவும் மறுமையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(B) ன் நாபி(F) அன்

இதன் பொருள் :

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

(ஆதாரம்: புகாரி 1032)

அளவுக்கு மேல் மழை பெய்தால்

சாதாரனமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்கண்ட துஆவை ஓதும் படி கற்றுத் தந்த நபியவர்கள் அளவுக்கு மேல் மழை பெய்யும் போது ஓதுவதற்கு இன்னொரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள். அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கீழுள்ள துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا


அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா

என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!

(ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)

அல்லது

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B)லி வல் ஆஜாமி வள்ளிராபி(B) வல் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி

இதன் பொருள் :

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.

(ஆதாரம்: புகாரி 1013, 1016)

அல்லது

اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ


அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(டீஸலி வல் ஆகாமி வபு(B)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி

(ஆதாரம்: புகாரி 1017)

புயல் வீசும் போது என்ன செய்வது?

தற்போதுள்ள சூல்நிலையில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயலின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் ஏற்படும் போது நாம் ஓத வேண்டிய துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். இந்த துஆவை நாம் ஓதுவதின் மூலம் புயலினால் நமக்கு ஏற்படவிருக்கும் தீங்கை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ


அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(F)ஹா வகைர மா உர்ஸிலத் பி(B)ஹி. வஅவூது பி(B)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(F)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B)ஹி

இதன் பொருள் :

இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(ஆதாரம்: முஸ்லிம் 1496)

மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் செய்வதின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!