Wednesday, April 24, 2013

விரட்டிய இடத்தை புரட்டிய தவ்ஹீத்!


வட சென்னை மாவட்டத்திலுள்ள நேதாஜி நகர் பகுதியானது தவ்ஹீத் வரலாற்றில் அதிகமான எதிர்ப்புகளை சந்தித்த பகுதிகளில் முக்கிய பகுதி. ஏனெனில் முரீது, தரீக்கா, தர்ஹா வழிபாடு போன்ற ஷிர்க்கான காரியங்களில் முதன்மையாக இருக்கும் பகுதி. தெருவுக்குத் தெரு தரிக்காக்களை வைத்து “நாயகம் வாப்பா” போன்ற ஷெய்குகளின் காலைக் கழுவிக் குடிப்பது, இருட்டு திக்ர் செய்வது போன்ற அனாச்சாரங்கள் அதிக அளவில் நடக்கும் பகுதி.


1990களில் மெல்லத் துவங்கிய தவ்ஹீத் பிரச்சாரம் 1995-களில் மிக வீரியம் அடைந்து 1998-ல் கலவரம் நடக்கும் அளவிற்குச் சென்றது. 1998 கலவரத்தில் பல தவ்ஹீத் சகோதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் சிறை சென்றனர். வழக்குகளை சந்தித்தனர். இப்படி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யபட்டுவந்தது. தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ததின் விளைவாக தவ்ஹீதை எதிர்த்த மக்களில் பலர் ஏகத்துவவாதிகளாகவும், சிலர் ஏகத்துவத்திற்கு ஆதரவாளர்களாகவும் அல்லாஹ்வின் அருளால் மாறியுள்ளார்கள்.

இளைய சமுதாயம் தொடர்ந்து இந்த தவ்ஹீத் கொள்கையின் பக்கம் வந்தது. இதன் விளைவாக நம்மை விரட்டி அடித்த சுன்னத் ஜமாத் பள்ளிக்கு மிக அருகில் (30 அடி தூரத்தில்) வசிக்கும் சகோதரர் நமது ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நடத்த கோரிக்கை வைத்தார். அதன்படி வாரா வாரம் ஞாயிற்றுக் கிழைமை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்று வருகின்றது.

முதலில் 60 பெண்கள் கலந்து கொண்டார்கள். அடுத்தடுத்த வாரங்களில் அல்லாஹ்வின் அருளால் பயான் நடக்கும் மாடியும் நிரம்பி, பக்கத்து வீட்டு மாடியும் நிரம்பக்கூடிய அளவிற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதை பொருத்துக்கொள்ளாத சுன்னத் (?) ஜமாத்தினர் முதலில் ஒரு குழுவினர் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று புகார் செய்தனர். அது பலனளிக்கவில்லை என்ற உடன் வாரந்தோறும் நமக்குப் போட்டியாக அதே நேரத்தில் சுன்னத் ஜமாஅத் உலமாக்களை (?) வர வழைத்து பயான் நடத்துகின்றார்கள்.

பெரிய பெரிய ஒலி பெருக்கிகளை நமது பயான் நடக்கும் இடம் அருகில் வைத்து நம்மை பயான் செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்துகின்றார்கள். இந்த வரிசையில் 17/2/13 அன்று வழிகெட்ட பரலேவிகளின் தலைவராக இருக்கக் கூடிய சேக் அப்துல்லாஹ் ஜமாலியை அழைத்து வந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதர, சகோதரிகளில் சிலர் அங்கு சென்று ஜமாலியை கேள்வி கேட்டு பயந்து ஓட வைத்துவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்…

கேள்வி கேட்ட ஒரு பெண்மனி “வரதட்சணை கல்யாணத்திற்கு போகலாமா?” எனக் கேட்டார். அதற்கு ஜமாலி “வரதட்சணை தவறுதான்; ஆனால் கல்யாணத்தில் கலந்து கொள்ளலாம். ஏனென்றால் நாம் கலந்து கொள்ளவில்லை என்றால் யார் திருமணத்தை நடத்திவைப்பது?. யாரும் வரவில்லை என்றால் அவர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள் என அறிவார்ந்த(?) பதிலைக் கூறினார். இந்த பதில் அங்குவந்த பெண்களுக்கு பரலேவி கொள்கையின் மீது வெறுப்பை அதிகப்படுத்தியது.

மேலும் சிறுவர்களும் இளைஞர்களும் கேள்வி கேட்டார்கள். ஒரு சகோதரர் “தொழுகையில் தொப்பி அணிவது சுன்னத் எனக் கூறி தொப்பி இல்லை என்றால் பிளாஸ்ட்டிக் தொப்பி வைத்து தொழ வரும் அனைவரையும் தொப்பி போட சொல்லும் நீங்கள், தாடி வைப்பதும் சுன்னத்தாக இருப்பதால், பிளாஸ்ட்டிக் தொப்பிபோல பிலாஸ்ட்டிக் தாடிவைக்கவும் கட்டாயப் படுத்தலாமே” எனக் கேட்ட போது சிரிப்பொலி ஜமாலியின் காதை கிழித்தது. இதற்கும் பதில் சொல்ல வழியில்லாமல் சில மழுப்பலான பதில்களை வாந்தி எடுத்தார் ஜமாலி.

கேள்விகளின் உக்கிரத்தை உணர்ந்த ஜமாலி உடனடியாக” நிகழ்ச்சி முடிந்துவிட்டது” என ஓட்டம் எடுத்தார். மேலும் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த பள்ளிவாசல் நிர்வாகிகளையும் வறுத்தெடுத்தார். ஏன் இப்படிப்பட்ட நிகழ்சிக்கு என்னை அழைத்தீர்கள்; பயானுக்கு வந்தவர்களில் பாதிப்பேர் தலையில் தொப்பி இல்லை. நஜாத் காரர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தீர்கள்? என கொட்டி தீர்த்துவிட்டு சென்றார்.

இதன்பிறகு இவர்கள் தொடர்ந்து நடத்தும் பயான்களில் கேள்வி-பதில் பகுதியையே தூக்கிவிட்டனர். இப்படி இவர்கள் அழைத்துவரும் உலமாக்கள் (?) ஷிர்க் பித்அத்தையே தூக்கிப்பிடிப்பவர்களாக இருப்பதினால் இவர்களை இப்படியே விடக்கூடாது என அந்த சுன்னத் ஜமாத் பள்ளி அருகில் நமது ஜமாஅத் சார்பாக நூலகம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இந்த நூலகத்தின் மூலம் இஸ்லாமிய பயான் டிவிடிக்களை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர்.

மேலும் செல்ஃபோன் மெமரி கார்டுகளில் இலவசமாக இஸ்லாமிய பயான்களை பதிவேற்றம் செய்து தருகின்றனர். மேலும் இணையதளம் மூலமாக கிளையின் செயல்பாடுகளைக் கொண்டு செல்லும் முகமாக தனியொரு இணையதளத்தையும் துவக்கி சிறப்பாக செயல்படுகின்றனர்.

இந்த சுன்னத் ஜாமஅத் பள்ளிவாசலில் “சுன்னத் ஜமாத்தினரைத் தவிர யாரும் தொழ வரக்கூடாது” என பல வருடங்களாக அறிவிப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படிப்பட்ட அறிவிப்பிற்கு அந்தப் பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஐந்து வேளை தொழுது சமுதாயத்திற்கு தேவையான பல்வேறு நற்பணிகள் புரியும் தவ்ஹீத் மக்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றால், ஒருவேளை தொழுகை இல்லாதவனெல்லாம் எப்படி பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்க முடியும் என, பொது மக்கள் மிகக் கடுமையாக எதிப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். பள்ளிவாசலுக்கு அடுத்த கட்டடத்தில் வசிக்கும் ஒரு சகோதரர் தனது வீட்டு சுவரில் “பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியானவர்கள் யார்?” என்ற தலைப்பிலும், “அநியாயக்காரன் யார்?” என்ற தலைப்பிலும் குர் ஆன் வசனத்தை எழுதியுள்ளார்.

இப்படியாக அல்லாஹ் தனது கிருபையால் நேதாஜி நகர் பகுதியில் தவ்ஹீதை விரட்டி அடித்த அந்த சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து இழிவை ஏற்படுத்தி வருகின்றான். மக்களும் தவ்ஹீத்வாதிகளை எதிர்க்க “இந்த தொழுகை இல்லாத ஒழுக்கம் இல்லாத போலி சுன்னத் ஜமாத் தலைவர்களுக்கு அருகதை இல்லை” என எதிர்க்குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் தவ்ஹீத் வாதிகளை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் இந்த போலி சுன்னத் ஜமாத் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் இவர்களின் மிரட்டலுக்கு சிறிதும் அஞ்சாமல் நமது சகோதர்கள் தொடர்ந்து தங்களது பிராச்சாரப் பணியை செய்துவருகின்றனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.