Monday, August 04, 2014

50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் தவ்ஹீத் ஜமாஅத் தர வேண்டும் ?

கேள்வி
சூனியக்காரனுடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சூனியக்காரன் சூனியம் செய்து உங்களைத் தற்கொலை செய்ய வைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் 50 லட்சம் ரூபாய் தரும் என்று கூறியுள்ளீர்கள். உங்கள் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டியது தானே என்று சிலர் கேட்கிறார்கள்.

முஹம்மது சரீப், கானத்தூர்

பதில்

சூனியக்காரனை அல்லாஹ்வாக்கி ஈமானை இழந்தவர்கள் இந்தக் கேள்வியின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். சூனியக்காரன் தனது சூனியத்தில் வென்று 50 லட்சம் வாங்கப் போகிறான் எனபதில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

நடக்கவே நடக்காது என்ற விஷயத்தில் விடப்படும் அறைகூவலை எப்படி புரிந்து கொள்வது என்ற அறிவு இவர்களுக்கு இல்லை.
அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கிறது என்று கூறுவோருக்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மூலம் அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கச் சொல்கிறான்.
அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 43:81
அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருந்தால் நான் முதலில் வணங்குவேன் என்று கூறினால் அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கக்கூடும் என்றும் அந்தப் பிள்ளையை நபிகள் நாயகம் வணங்குவார்கள் என்றும் மூடன் தான் புரிந்து கொள்வான்.
அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பதை அதிக அழுத்தத்துடன் சொல்வதற்காகவே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று அறிவுடையோரும் அல்லாஹ்வை நம்பியவர்களும் புரிந்து கொள்வார்கள்.
சூனியக்காரன் வெல்லப்போவதும் இல்லை. நாம் 50 லட்சம் கொடுக்கப் போவதும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லவே இதைக் கூறுகிறோம். இதை ஒப்பந்த வீடியோவில் கூட தெளிவு படுத்திவிட்டோம்.
என் பணத்தையே கொடுப்பதாகச் சொன்னாலும் சூனியக்காரன் நம்பிக்கைப்படி நான் செத்துவிட்ட பின் என்னிடம் அவன் வாங்க முடியாது. அதற்காகத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தரும் என்று சொல்லப்பட்டது.
என் பணத்தையும் நான் கொடுக்கும் நிலை ஏற்படாது. ஜமாஅத்தின் பணத்தையும் கொடுக்கும் நிலை ஏற்படாது. சூனியக்காரன் ஒருக்காலும் வெல்ல மாட்டான் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
"உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.
திருக்குர்ஆன் 10:77
"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)
திருக்குர்ஆன் 20:69
அல்லாஹ்வின் கூற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள் சூனியக்காரன் வெல்ல மாட்டான் என்றுதான் நம்புவார்கள். அதை இன்னும் அழுத்தமாகச் சொல்வதற்குத் தான் ஐம்பது லட்சம் தருவதாகச் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
அல்லாஹ்வின் இந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லாமல் சூனியக்காரன் வெல்வான் என்று நம்பி காஃபிராகிப் போனவர்கள் தான் ஐம்பது லட்சம் யாருடைய பணம் என்று கேட்பார்கள். சூனியக்காரனை அல்லாஹ்வாக்கியே தீருவது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது இந்தக் கேள்வியில் இருந்து இன்னும் உறுதியாகிறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.