Saturday, March 03, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்கள்


முந்தைய பகுதிகள்:




2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றை – செய்யாதவற்றை – அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும். 
  • திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.
  • புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
  • அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
  • இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது. 

இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. 

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களைப் பார்ப்போம். 

முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன், எப்படி சமுதாயத்தில் நுழைந்தன? ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதன் நோக்கம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம். 

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்கு இந்த வளர்ச்சி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய் தங்கள் தலைமை பறி போய் வருமானம் தடைப்பட்டுப் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். 

இஸ்லாத்தின் பெரு வளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். 

இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டி விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி அறிவிப்புகளாகவே மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்தது. எனவே ஹதீஸ் என்ற பெயரில் இட்டுக்கட்டி பரப்பினால் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறலாம் என்று எண்ணி இட்டுக் கட்டினார்கள். 

நம்ப முடியாத உளறல்களையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறியதாகப் பரப்பலானார்கள். 

இவற்றையெல்லாம் கேட்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள். 

كشف الخفاء - (ج 2 / ص 412)

ومن الأحاديث المكذوبة على رسول الله صلى الله عليه وسلم حديث : من قال لا إله إلا الله خلق الله من كل كلمة طائرا له سبعون ألف لسان في كل لسان سبعون ألف لغة يستغفرون الله تعالى له . ومن فعل كذا وكذا أعطي من الجنة سبعين ألف مدينة في كل مدينة سبعون ألف قصر في كل قصر سبعون ألف حوراء

யாரேனும்  லாயிலாஹ இல்லல்லாஹ் என்று  கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம்  நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு  நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப்  பேசும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 2)

والباذنجان شفاء من كل داء

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 2)

الباذنجان لما أكل له

எந்த நோக்கத்திற்காக கத்தரிக்காய் சாப்பிடுகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறும். 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 161)

حديث عليكم بالعدس فإنه مبارك فإنه يرق له القلب ويكثر الدمعة وفي لفظ قدس العدس على لسان سبعين نبيا

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

لو كان الأرز رجلا لكان حليما ما أكله جائع إلا أشبعه

நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது  மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக  இருந்திருக்கும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

أحضروا موائدكم البقل فإنه مطردة للشيطان

உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது  ஷைத்தானை விரட்டியடிக்கும். 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 8)

أسخنت لرسول الله صلى الله عليه و سلم ماء فى الشمس فقال لا تفعلى يا حميراء فإنه يورث البرص

ஆயிஷாவே! சூரிய வெளிச்சத்தால்  சூடாக்கப்பட்ட தண்ணீரில்  குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை  ஏற்படுத்தும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

من لم يكن له مال يتصدق به فليلعن اليهود والنصارى

தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும்  சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

ثلاثة تزيد في البصر النظر إلى الخضرة والماء الجاري والوجه الحسن

பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றைப்  பார்ப்பது, பார்க்கும் திறனை அதிகரிக்கும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

النظر إلى الوجه الجميل عبادة

அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

الزرقة في العين يمن

கண்கள் நீல நிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

أكل السمك يوهن الجسد

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

من أخذ لقمة من مجرى الغائط والبول فغسلها ثم أكلها غفر له

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

 إن الله خلق السموات والأرض يوم عاشوراء

ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமிகளையும் படைத்தான். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

عليكم بالملح فإنه شفاء من سبعين داء

உப்பை விட்டுவிடாதீர்கள். உப்பில் எழுபது நோய்களுக்கு நிவாரணம் உள்ளது. 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

ما من رمان إلا ويلقح بحبة من رمان الجنة

எந்த ஒரு  மாதுளம் பழத்திலும் அதன் ஏதோ ஒரு விதையில் சொர்க்கத்தின்  தண்ணீர் இருக்கும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

المجرة التي في السماء من عرق الأفعى التي تحت العرش

ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது. 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

شكى إلى النبي صلى الله عليه وسلم قلة الولد فأمره أن يأكل البيض والبصل

முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான  சந்ததிகள் பெற முடியும். 

الفوائد الموضوعة في الأحاديث الموضوعة للكرمي - (ج 1 / ص 99)

شاوروهن وخالفوهن -يعني النساء

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள் ! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்! 

المنار المنيف - (ج 1 / ص 108)

الدجاج غنم فقراء أمتي

கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும். 
 المنار المنيف - (ج 1 / ص 109)

لو يربي أحدكم بعد الستين ومئة جرو كلب خير له من أن يربي ولدا

160 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும். 

இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டினார்கள்.

நடைமுறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது.

கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இல்லை.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தவும் இல்லை.

பருப்பு சாப்பிடுவதற்கும், இதயம் இளகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அர்ஷுக்குக் கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை. 

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் குளிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் யாருக்கும் குஷ்டம் வரவில்லை.

ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்ப்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியைப் பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகின்றனர். 

நீல நிறக் கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.

வானம், பூமியைப் படைத்து இரவு பகல் ஏற்பட்ட பிறகு தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாள் ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது. 

இவற்றைப் பார்க்கும் போது இவ்வாறு கூறியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீது சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் மேற்கொண்ட செய்திகளைப் புனைந்தனர் என்பது தெளிவாகும். 

2. ஆர்வக் கோளாறு:

மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களைச் சுயமாகத் தயாரித்தனர். 

மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள். 

இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கியதோடு நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள் மூலம் உருவாக்கினார்கள். 

நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஹதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش - (ج 1 / ص 29)

أحاديث فضل سور القرآن مائة وأربعة عشر حديثا ذكرها الزمخشري والبيضاوي تبعا للواحدي كلها كذب على رسول الله واتهم المحدثون بوضعها نوح بن ابي مريم وقيل غيره والله أعلم

நூஹ் பின் அபீமர்யம் 114 அத்தியாயங்களின் சிறப்பைக் கூறும்  114 ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்.

اللآلي المصنوعة - (ج 1 / ص 208)

روى نوح بن أبي مريم الجامع في فضائل القرآن سورة سورة عن رجل عن عكرمة عن ابن عباس فقيل له من أين لك هذا قال لأن الناس قد اشتغلوا بمغازي ابن إسحاق وغيره فحرضتهم على قراءة القرآن

இவரிடம் இந்த ஹதீஸ்கள் உமக்கு எப்படிக் கிடைத்தன என்று கேட்கப்பட்ட போது மக்கள் இப்னு இஸ்ஹாக் என்பவர் எழுதிய வரலாற்று நூலில் ஈடுபாடு காட்டினார்கள். அவர்களைக் குர்ஆன் பக்கம் ஈர்ப்பதற்காக நான் தான் இட்டுக்கட்டினேன் என்று கூறினார்

சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் ஆல இம்ரான், சூரத்துல் பகரா, ஆயத்துல் குர்ஸீ, பகராவின் கடைசி இரு வசனங்கள், கஹ்பு அத்தியாயம், குல்ஹுவல்லாஹு அத்தியாயம், குல்அவுது பிரப்பில் ஃபலக், குல்அவுது பிரப்பின்னாஸ் அத்தியாயங்கள், இதா ஸுல்ஸிலத், குல்யா அய்யுஹல் காஃபிரூன், தபாரக்கல்லதீ போன்றவை தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்புகள் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை. 

المنار المنيف - (ج 1 / ص 111)

ومنها أحاديث الاكتحال يوم عاشوراء والتزين والتوسعة والصلاة فيه وغير ذلك من فضائل لا يصح منها شيء ولا حديث واحد و لا يثبت عن النبي صلى الله عليه و سلم فيه شيء غير أحاديث صيامه وما عداها فباطل

ஆஷுரா நாளில் சுருமா இட வேண்டும்; அலங்கரித்துக் கொள்ள வேண்டும்; குடும்பத்துக்கு அன்றைய தினம் அதிகமாகச் செலவிட வேன்டும் என்பது போன்ற ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பது பற்றிய ஹதீஸைத் தவிர மற்ற அனைத்துமே ஆதாரமற்றதாகும்

(அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் எனும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை) 

إحياء علوم الدين ومعه تخريج الحافظ العراقي - (ج 1 / ص 273)

حديث البداءة في قلم الأظافر بمسبحة اليمنى والختم بإبهامها وفي اليسرى بالخنصر إلى الإبهام لم أجد له أصلا وقد أنكره أبو عبد الله المازري في الرد على الغزالي

நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவை அனித்தும் ஆதாரமற்றவை

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 193)

حديث صلاة بخاتم تعدل سبعين بغير خاتم قال في المقاصد موضوع

மோதிரம் அணிந்து தொழுவது, மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது. 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 188)

أن الصلاة بعمامة تعدل بخمس وعشرين وجمعة بعمامة تعدل سبعين جمعة بغير عمامة إن الملائكة يشهدون الجمعة متعممين ولا يزالون يصلون على أصحاب العمائم حتى تغرب الشمس قال ابن حجر موضوع

தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது. 

المنار المنيف - (ج 1 / ص 96)

وكل حديث في ذكر صوم رجب وصلاة بعض الليالي فيه فهو كذب مفترى كحديث من صلى بعد المغرب أول ليلة من رجب عشرين ركعة جاز على الصراط بلا حساب

ரஜப் மாத நோன்பு பற்றி கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.

المنار المنيف - (ج 1 / ص 98)

ومنها 15 أحاديث صلاة ليلة النصف من شعبان

 175 - كحديث يا علي من صلى ليلة النصف من شعبان مئة ركعة بألف قل هو الله أحد قضى الله له كل حاجة طلبها تلك الليلة وساق جزافات كثيرة وأعطي سبعين ألف حوراء لكل حوراء سبعون ألف غلام وسبعون ألف ولدان إلى أن قال ويشفع والداه كل واحد منهما في سبعين

ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில்  நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரமற்றவை 

الموضوعات للصغاني - (ج 1 / ص 72)

ومنها الأحاديث الموضوعة في فضيلة رجب

ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. 

كشف الخفاء - (ج 2 / ص 421)

وباب صلاة الرغائب وصلاة نصف شعبان وصلاة نصف رجب وصلاة الإيمان وصلاة ليلة المعراج وصلاة ليلة القدر وصلاة كل ليلة من رجب وشعبان ورمضان ، وهذه الأبواب لم يصح فيها شئ أصلا . وباب صلاة التسابيح لم يصح فيه حديث . وباب زكاة الحلي لم يثبت فيه شئ

ஷஃபான் பதினைந்துக்கான தொழுகை, ரஜப் பதினைந்துக்கான தொழுகை, மிஃராஜ் இரவுத் தொழுகை, லைலதுல் கத்ர் இரவுக்கான தொழுகை குறிப்பிட்ட பகல் குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை. 

முஹம்மத் என்ற பெயரைக் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களைத் தடவுதல் 

அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணி இட்டுக் கட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள். 

3. தனி மரியாதை பெறுவதற்காக:

மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மத குருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது. 

இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள். 

الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 2)

حديث إذا جلس المتعلم بين يدي العالم فتح الله عليه سبعين بابا من الرحمة ولا يقوم من عنده إلا كيوم ولدته أمه وأعطاه الله بكل حرف ثواب ستين شهيدا موضوع

  تنزيه الشريعة المرفوعة - (ج 1 / ص 283)

حديث إذا جلس المتعلم بين يدى العالم فتح الله تعالى عليه سبعين بابا من الرحمة ولا يقوم من عنده إلا كيوم ولدته أمه وأعطاه الله بكل حرف ثواب ستين شهيدا وكتب الله له بكل حديث عبادة سبعين سنة وبنى له بكل ورقة مدينة كل مدينة مثل الدنيا عشر مرات

ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான். 

تذكرة الموضوعات للفتني - (ج 1 / ص 8)

إن أهل الجنة ليحتاجون إلى العلماء في الجنة وذلك أنهم يزورون الله في كل جمعة فيقول تمنوا على ما شئتم فيلتفتون إلى العلماء فيقولون ماذا نتمنى على ربنا فيقولون تمنوا كذا وكذا

சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள். 

 الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 6)

حديث إن العالم والمتعلم إذا مرا على قرية فإن الله تعالى يرفع العذاب عن مقبرة تلك القرية أربعين يوماً لا أصل له

ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்குப் படிக்கும் மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான். 

الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 11)

حديث حضور مجلس عالم أفضل من صلاة ألف ركعة أورد ابن الجوزي في الموضوعات

ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது. 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 286)

حديث علماء أمتي كأنبياء بني إسرائيل قال ابن حجر والزركشي لا أصل له

என் சமுதாயத்தில் உள்ள உலமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள். 

كشف الخفاء - (ج 2 / ص 220)

من أذل عالما بغير حق أذله الله يوم القيامة على رؤوس الخلائق

ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான். 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 285)

حديث من زار العلماء فقد زارني ومن صافح العلماء فكأنما صافحني ومن جالس العلماء فكأنما جالسني ومن جالسني في الدنيا أجلس الي يوم القيامة في إسناده كذاب

யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார். 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 287)

حديث مداد العلماء أفضل من دم الشهداء

ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது. 

ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் தான் நான் வழங்குவேன். எந்த மலக்கும் எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அறிவிக்கப்படும் ஹதீஸ். 

இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுக்கட்டியவையாகும். 

4. மன்னர்களை மகிழ்விக்க:

மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தர வேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள். 

மன்னர் மஹ்தி என்பவரின் ஆட்சியின் போது, அவருக்கேற்ப ஹதீஸ்களை இட்டுக்கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றார்.  
  • மன்னர்களுக்குத் தண்டனை இல்லை
  • மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை

என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது மன்னர்களுக்காகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன. 

5. இயக்க வெறி:
  • மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
  • மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.
  • அலீ (ரலி) யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்
  • துருக்கியர், சூடானியர், அபீசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.
  • ஒரு மொழியைப் புகழ்ந்தும், இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.
  • நெசவு, விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். 
  • இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள், அலீ (ரலி) யின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.

இவை அனைத்தும் இயக்க வெறியின் காரணமாக இட்டுக்கட்டப்பட்டவையாகும். 

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்:

மக்கள் மத்தியில் உருக்கமாகவும், சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர். 

நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும், வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள். 

مائة حديث من الأحاديث الضعيفة والموضوعة - (ج 1 / ص 4)

(انطلق النبي صلى الله عليه وسلم وأبو بكر إلى الغار، فدخلا فيه فجاءت العنكبوت فنسجت على باب الغار

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை 

أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش - (ج 1 / ص 70)

وأما ما يدور على الألسنة اللهم أيد الإسلام بأحد العمرين قال في الأصل لا أعلم له أصلا

இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) துஆ கேட்டதாகக் கூறுவது ஆதாரமற்றது.. 

المصنوع في معرفة الحديث الموضوع - (ج 1 / ص 170)

حديث مصارعته أبا جهل لا أصل له ذكره الحلبي في حاشية الشفا

அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது பற்றிய செய்தி ஆதாரமற்றது 

المصنوع في معرفة الحديث الموضوع - (ج 1 / ص 261)

وفي المواهب ما يذكره القصاص من أن القمر دخل في جيب النبي فخرج من كمه فليس له أصل

சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதியாக வெளியே வந்தது என்பது கட்டுக்கதை. 

الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 1)

حديث اجتماع الخضر وإلياس في كل عام في الموسم قال ابن حجر لا يثبت فيه شيء

ஹிழ்ர், இஸ்மாயீல் ஆகிய நபிமார்கள் உயிருடன் இருக்கின்றார்கள். மினாவில் ஆண்டு தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றார்கள் என்ற ஹதீஸ்கள் பொய்யானவை

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 350)

حديث كان رسول الله صلى الله عليه و سلم يوحى إليه ورأسه في حجر علي فلم يصل العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه و سلم صليت قال لا قال اللهم إن كان في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس فقالت أسماء فرأيتها غربت ثم رأيتها طلعت بعد ما غربت

மறைந்த சூரியன் அலீ (ரலி) அவர்களுக்காக மீண்டும் உதித்தது என்ற செய்தி ஆதாரமற்றது. 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 471)

حديث من ولد له مولود وسماه محمدا تبركا به كان هو ومولوده في الجنة ذكره ابن الجوزي في الموضوعات

முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது கட்டுக்கதை. 

المنار المنيف - (ج 1 / ص 63)

ومنها 8 أن يكون في الحديث تاريخ كذا وكذا مثل قوله إذا كان سنة كذا وكذا وقع كيت وكيت وإذا كان شهر كذا وكذا وقع كيت وكيت

எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும் என்பது கட்டுக்கதை. 

இப்படியெல்லாம் இட்டுக்கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துக்கள் அடங்கிய பழமொழிகள், தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே! 
  • அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.
  • சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.
  • கஞ்சன் அல்லாஹ்வின் பகைவன்.
  • தட்டு சிறியதாக இருப்பதில் பரகத் உள்ளது.
  • சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்ததாகும்.
  • நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.
  • வறுமை எனக்குப் பெருமை.
  • உண்ணும் போது பேசக் கூடாது.
  • தடுக்கப்பட்டவைகள் இனிமையாகத் தெரியும்.
  • ஒருவனுக்கு எது தெரியவில்லையோ அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.
  • அடுத்தவனுக்குக் குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.
  • தெரியாது என்று கூறுவது பாதிக் கல்வியாகும்.
  • நபிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.
  • நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்குக் கெட்டதாகத் தெரியும்.
  • முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.
  • தனிமையில் தான் ஈமானுக்குப் பாதுகாப்பு.
  • பல் துலக்குவது பேச்சாற்றலை அதிகரிக்கும்.
  • நல்லடியார்களைப் பற்றிப் பேசினால் அங்கே அருள் இறங்கும்.
  • வாதத் திறமையுள்ளவர்களிடம் நல்ல செயல்கள் இருக்காது.
  • எந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள் அவரும் கூட தான் வலியுல்லாஹ் என்பதை அறிய மாட்டார். 
  • நோயாளி புலம்புவது தஸ்பீஹ் ஆகும்.
  • சாவதற்கு முன் செத்து விடுங்கள்.
  • அறிவு இல்லாதவனுக்கு மார்க்கம் இல்லை.
  • அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் என்ற பெயரில் கட்டுக்கதைகள்.
இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன. 

7. சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர்:

ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டியுள்ளனர். 

இவர்களில் மகா கெட்டவர்கள் வைத்தியர்களாவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவம் கற்றுக் கொடுக்க அனுப்பப்படவில்லை. தேன், பேரீச்சம்பழம், கருஞ்சீரகம் போன்ற மிகச் சில பொருட்களின் சில மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

ஆனால் யுனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபி வழி மருத்துவம் என பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமான ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர். 

இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபி வழி மருத்துவம் என்றனர். 

ஒவ்வொரு நோய்க்கும் நபி (ஸல்) அவர்கள் மருந்து கூறியதாகச் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள். 

இன்னும் கூட இந்த யுனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் கூறுவதில் தொன்னூறு சதவிகிதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம். 

8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்:

சிலர் முதுமையின் காரணமாக – மூளை குழம்பியதன் காரணமாக – நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். 

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர். 

இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஸகானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும். 

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். 

இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். 

ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.