Monday, September 02, 2013

ஹஜ் - விளக்கக் கையேடு


ஹஜ் தமத்துஃ

ஹஜ் செய்யச் செல்பவர்கள் முதல் உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமைக் களைந்து, பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு ஹஜ் தமத்துஃ என்று பெயர்.

உம்ரா செய்யும் முறை

1. இஹ்ராம் அணிதல்

குளித்து, நறுமணம் பூசிய பின் இஹ்ராமுடைய ஆடை அணிந்து,

லப்பைக் உம்ரதன்

(பொருள் : உம்ராவை நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூறவேண்டும். பின்னர்,

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லா ஷரீக்க லக லப்பைக் இன்னல்
ஹம்த வன்னிஃமத லக வல் முல்க்
லாஷரீக்க லக்

(பொருள் : யா அல்லாஹ்! உன்னிடம் வந்து விட்டேன். உனக்கு இணையில்லை. உன்னிடம் வந்து விட்டேன். புகழும் அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே சொந்தம். உனக்கு இணையில்லை) என்று சப்தமாக தல்பியா கூற வேண்டும். இவ்வாறு தல்பியாவை அதிகமதிகம் கூறவேண்டும்.

இஹ்ராம் அணிந்தவர்கள் செய்யக்கூடாதவை :

ஆண்கள் செய்யக் கூடாதவை:

1. தலையை மறைக்கக் கூடாது. வெயில், மழையிருந்து காத்துக் கொள்ள குடை பிடிப்பதில் தவறில்லை.

2. தையல் உள்ள ஆடைகளை அணியக் கூடாது.

பெண்கள் செய்யக் கூடாதவை:

1. முகத்தை மறைக்கக் கூடாது; கையுறை அணியக் கூடாது.

ஆண், பெண் இருவருக்கும் பொதுவான தடைகள்:

1. திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது.

2. இல்லறத்தில் ஈடுபடக் கூடாது; முத்தமிடுதல், கட்டியணைத்தல் போன்றவை கூடாது.

3. வீணான விவாதங்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது.

4. உயிர்ப் பிராணிகளைக் கொல்லக்கூடாது. (உணவுக்காக உயிர்ப்பிராணிகளை அறுப்பதில் தவறில்லை.)

5. வேட்டையாடக் கூடாது. தமக்காக பிறரை வேட்டையாடுமாறு தூண்டக் கூடாது.

6. முடிகளையும் நகங்களையும் வெட்டக் கூடாது.

7. நறுமணம் பூசக்கூடாது.

2. கஅபாவை தவாஃப் செய்தல்

கஅபா நமது இடது கைப்பக்கம் இருக்குமாறு வைத்துக் கொண்டு, கஅபாவை சுற்றுவதற்கு தவாஃப் என்று பெயர். இவ்வாறு சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்து சுற்ற வேண்டும். தவாஃபின் போது ஆண்களுக்கு வலது புஜம் திறந்திருக்கும் நிலையில் மேலாடை அணியவேண்டும். ஏழு சுற்றுக்களில் மூன்று சுற்றுக்கள் வேகமாக நடக்க வேண்டும். நான்கு சுற்றுக்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும். ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டு சுற்றை ஆரம்பித்து மீண்டும் அதே இடத்தை அடைந்தால் ஒரு சுற்று நிறைவேறும். ஒவ்வொரு சுற்றிலும் ஹஜ்ருல் அஸ்வதை கையால் தொட்டு முத்தமிட வேண்டும். இயலாவிட்டால் ஹஜ்ருல் அஸ்வதை அடையாளம் காட்டும் பச்சை விளக்கை மையமாக வைத்து கையால் சைகை செய்ய வேண்டும். இதே போன்று ருக்னுல் யமானியையும் ஒவ்வொரு சுற்றிலும் முத்தமிட வேண்டும். ருக்னுல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையில் வரும் போது....

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன் னார்

(பொருள் : எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்கு! மறுமையிலும் நன்மையை வழங்கு. நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்று) என்ற துஆவை ஓத வேண்டும். இது தவிர தவாஃபின் போது பிரத்தியேக துஆக்கள் எதுவும் இல்லை. தவாஃப் முடிந்து மகாமு இப்ராஹீம் என்ற இடத்தை வந்தடைந்து இரண்டு ரக்அத் தொழவேண்டும். இவ்வாறு மகாமு இப்ராஹீமை நோக்கி வரும் போது.

வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா

(பொருள் : மகாமு இப்ராஹிமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.) என்று ஓதவேண்டும்.

தொழுகையின் போது தோள் புஜங்கள் இரண்டையும் மூடியிருக்க வேண்டும்.

குறிப்பு : மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாஃப் செய்யக் கூடாது. எனவே மாதவிடாய் நின்ற பின் உம்ராவை மீண்டும் செய்து கொள்ளவேண்டும்.

3. ஸஃபா மர்வாவில் ஸஈ செய்தல்

ஸஃபா மர்வாவுக்கு இடையில் சற்று விரைவாக நடப்பதற்கு ஸஈ என்று பெயர். ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிப்பது ஒரு தடவை ஸஈ செய்வதாகும். பின்னர் மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிப்பது இரண்டாவது தடவை ஸஈ செய்வதாகும். இவ்வாறு ஏழு தடவை ஸஈ செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவை ஸஈ செய்யும் போதும் பச்சை அடையாளமிடப்பட்ட இரண்டு விளக்குகளுக்கு இடையில் ஆண்கள் சிறிது குலுங்கியவர்களாக ஓட வேண்டும். பெண்கள் அவ்வாறு குலுங்கி ஓடாமல் நடந்து செல்ல வேண்டும். முதன் முதல் ஸஃபாவை அடைந்ததும்

இன்னஸ் ஸஃபா வல் மர்வத்த மின் ஷஆயிரில்லாஹ்

(பொருள் : ஸபஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.) என்ற வசனத்தை ஓத வேண்டும். பின்னர்,

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு
லாஷரீகலஹு லஹுல் முல்கு
வலஹுல் ஹம்து வஹுவ அலா
குல்ஷய்யின் கதீர். லாயிலாஹ
இல்லல்லாஹு வஹ்தா அன்ஜஸ
வஃதா வநஸர அப்தா
வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா

(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியும் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்திலும் ஆற்றல் பெற்றவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். படைகளை அவன் மட்டுமே தோற்கடித்தான்.)

என்ற திக்ரை ஓதவேண்டும். பின்னர் துஆச் செய்யவேண்டும். பின்னர் மேற்கண்ட திக்ரை ஓதவேண்டும். பின்னர் துஆச் செய்யவேண்டும். பின்னர் மேற்கண்ட திக்ரை ஓதவேண்டும்.

பின்னர் மர்வாவை அடைந்ததும் மேற்கண்ட முறையில் செய்யவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் செய்யவேண்டும்.

4. தலைமுடியைக் களைதல்

ஆண்கள் தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அல்லது தலைமுடியை முழுமையாகக் குறைக்க வேண்டும். பெண்கள் தங்கள் தலைமுடியை சிறிது கத்தரித்துக் கொள்ள வேண்டும். உம்ராவுடைய காரியங்கள் இத்துடன் நிறைவடைகின்றது. இதன் பின்னர் இஹ்ராமைக் களைந்து விட வேண்டும்.

ஹஜ்ஜுடைய காரியங்கள்

உம்ராவை முடித்த பின்னர் மக்காவில் தங்கியிருந்து பிறை 8ல் ஹஜ்ஜுடைய கிரியைகள் ஆரம்பிக்கும் போது அந்த இடத்திலேயே,

லப்பைக் ஹஜ்ஜன்

(பொருள் : ஹஜ்ஜை நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூறி இஹ்ராம் கட்டிக் கொண்டு,

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லா ஷரீக்க லக லப்பைக்
இன்னல் ஹம்த வன்னிஃமத
லக வல் முல்க் லாஷரீக்க லக்

(பொருள் : யா அல்லாஹ்! உன்னிடம் வந்து விட்டேன். உனக்கு இணையில்லை. உன்னிடம் வந்து விட்டேன். புகழும் அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே சொந்தம். உனக்கு இணையில்லை.)
என்ற தல்பியாவைச் சொல்ல வேண்டும்.

1. பிறை 8ல் மினாவில் தங்குதல்

மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா, மறுநாள் சுப்ஹ் ஆகிய தொழுகைகளைத் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துகளை இரண்டு ரக்அத்துகளாகத் தொழவேண்டும்.

மினாவில் லுஹரையும் அஸரையும் அதேபோல் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே பாங்கில் (ஜம்வு செய்து) நபி (ஸல்) அவர்கள் தொழுததாக ஹதீஸ்களில் நம்மால் காண முடியவில்லை.

பிறை 9 சுப்ஹ் தொழுகை வரை மினாவில் இருந்து விட்டுப் பிறகு சுப்ஹ் தொழுதுவிட்டு அங்கிருந்து அரஃபாவுக்குப் புறப்பட வேண்டும்.

2. அரஃபாவில் தங்குதல்

ஹஜ் காரியங்களில் அரஃபாவில் தங்குவது மிகவும் அவசியம். பிறை 9ல் சிறிதளவேனும் அரஃபாவில் தங்காவிட்டால் ஹஜ் கூடாது. ஒருவேளை தாமதமாகி விட்டால் குறைந்த பட்சம் பிறை 10 அன்று சுப்ஹ் தொழுகைக்கு முன்னராவது ஒருவர் அரஃபாவை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்துவிடுவார்.

அரஃபாவில் துஆவும் திக்ரும் செய்யவேண்டும். ஆனால் கூட்டாகச் செய்யக் கூடாது. தனித்தனியாகச் செய்யவேண்டும். அங்கு நடத்தப்படும் பிரசங்கத்தை (குத்பாவை) கண்டிப்பாகக் கேட்கவேண்டும்.

அரஃபாவில் தங்கும்போது லுஹர், அஸர் தொழுகைகளை ஜம்உ செய்து தான் தொழவேண்டும். மக்ரிப் நேரத்தை அடைந்ததும் அங்கிருந்து கிளம்பி முஜ்தபா செல்லவேண்டும். அரஃபாவில் மக்ரிப் இஷா தொழக் கூடாது. ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு கிடையாது.

3. முஜ்தபாவில் இரவு தங்குதல்

அரபாவிருந்து மக்ரிப் நேரத்தில் புறப்பட்டு முஜ்தபா சென்று அங்கு இரவு தங்கவேண்டும். அங்கு ஒரே பாங்கில் மக்ரிப் இஷாவைத் தொழ வேண்டும். பின்னர் சுப்ஹ் தொழுதுவிட்டு, மஷ்அரில் ஹராமில் கிப்லாவை முன்னோக்கி துஆ மற்றும் திக்ரு செய்து விட்டு அங்கிருந்து மினா புறப்படவேண்டும்.

4. மீண்டும் மினாவுக்குச் செல்லுதல்

பிறை 10ல் சுப்ஹுக்குப் பின்னர் முஜ்தபாவிருந்து மினாவுக்குச் செல்லவேண்டும்.

மினாவில் செய்யவேண்டிய காரியங்கள்

1. சூரியன் உதயமான பிறகு ஜம்ரத்துல் அகபா என்ற இடத்தில் ஏழு கற்களை எறிய வேண்டும். தல்பியாவை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2. குர்பானி கொடுக்க வேண்டும்.

3. தலைமுடியைக் களைய வேண்டும். லி மொட்டையடித்தல் அல்லது முடியை குறைத்தல். (மொட்டையடித்தலே சிறந்தது.)

இத்துடன் இஹ்ராம் உடையைக் களைந்து விடலாம். ஆனால் இல்லறத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

5. தவாஃபுல் இஃபாளா லி ஹஜ்ஜுடைய தவாஃப்

ஹஜ் காரியங்களில் தவாஃபுல் இஃபாளா கண்டிப்பாகச் செய்யவேண்டும். இது ஹஜ்ஜுக்குரிய தவாஃப் ஆகும். இந்த தவாஃப் செய்யாமல் ஹஜ் நிறைவேறாது. இந்த தவாஃபின் போது வலது தோள் புஜம் திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏழு சுற்றுக்களிலும் நடந்தே செல்லவேண்டும். மற்றபடி மேற்கண்ட முறையிலேயே தவாஃப் செய்தல் மற்றும் மகாமு இப்ராஹீமில் தொழுதல் ஆகியவற்றைச் செய்யவேண்டும்.

குறிப்பு : தவாஃபுல் இஃபாளா செய்யும் போது பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் மாதவிடாய் நின்ற பிறகு தவாஃப் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் பத்தாம் நாள் தான் தவாஃபுல் இஃபாளா செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.

6. ஸஃபா மர்வாவில் ஸஈ செய்தல்

முன்னர் கூறியபடி ஸஃபா மர்வாவில் ஸஈ செய்யவேண்டும்.

7. கல்லெறிதல்

துல்ஹஜ் பிறை 11, 12, 13 ஆகிய நாட்கள் கல்லெறிய வேண்டிய நாட்களாகும். ஒருவர் விரும்பினால் 11, 12 நாட்களில் மட்டும் கல்லெறிந்து விட்டுத் திரும்பி விடலாம். அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய இரவுகளில் மினாவிலேயே தங்கிக் கொள்ளவேண்டும். பிறை 12ல் சூரியன் மறைவதற்கு முன் கல்லெறிந்து விட்டுப் புறப்படலாம். இரவில் மினாவில் தங்கி விட்டால் பிறை 13ல் கல்லெறிந்தாக வேண்டும். அவ்வாறு மினாவில் தங்கவில்லை என்றால் 11, 12ல் கல்லெறிந்ததுடன் புறப்பட்டு விடலாம்.

கல்லெறியும் நாட்களில் மினாவில் தங்குவது நபிவழியாகும். எனினும் தக்க காரணத்தால் மினாவில் தங்க இயலாமல் மக்காவிலேயே தங்கி விடுவதற்கு அனுமதி உள்ளது.

தினமும் சூரியன் உச்சியிருந்து சாய்ந்ததும் ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் உஸ்தா, ஜம்ரத்துல் அகபா ஆகிய இடங்களில் தலா ஏழு கற்கள் வீதம் கல்லெறிய வேண்டும். ஒவ்வொரு தடவை கல்லெறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். முதல் ஜம்ரத்துல் ஊலாவில் கல்லெறிந்து விட்டு, சிறிது தள்ளி துஆச் செய்ய வேண்டும். பிறகு ஜம்ரத்துல் உஸ்தாவில் கல்லெறிந்துவிட்டு சிறிது தள்ளி துஆச் செய்ய வேண்டும். பிறகு ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டு துஆச் செய்யாமல் புறப்பட்டு விட வேண்டும்.

8. தவாஃபுல் விதாஃ - விடை பெறும் தவாஃப்

ஊருக்குப் புறப்படும் முன் இறுதியாக தவாஃபுல் விதாவைச் செய்து விட்டு ஊருக்குப் புறப்படவேண்டும். வேறு ஏதேனும் வேலைகள் இருந்தால் அவற்றை முடித்து விட்டு இறுதியாக தவாஃபுல் விதாவைச் செய்து கொள்ளலாம்.

குறிப்பு: மாதவிலக்கான பெண்கள் தவாஃபுல் விதாவைச் செய்யாமல் ஊருக்குப் புறப்படலாம்.

9. மதீனா செல்வது

மதீனாவுக்குச் செல்வது ஹஜ்ஜுக் காரியங்களில் உள்ள ஒன்று அல்ல. மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவதற்காக மதீனா செல்லலாம். நபி (ஸல்) அவர்களுடைய கப்ரை ஸியாரத் செய்யவேண்டும் என்ற எண்ணத்திலும் மஸ்ஜிதுந் நபவீக்கு செல்லக் கூடாது. போன இடத்தில் ஸியாரத் செய்யலாம்.

ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன் 2:196)

என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் விளம்பரங்கள் செய்யாமல் உளத்தூய்மையுடனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் போன்ற காரியங்களில் ஈடுபடாமலும் இருப்பது மிகவும் அவசியம்.

ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் பாவங்களிருந்து முழுமையாக நீங்கி அன்று பிறந்த பாலகனைப் போன்று ஆகி விடுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஹஜ்ஜை முடித்துவிட்டு, ஊர் திரும்பியவுடன் மவ்து, தர்கா வழிபாடு, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் போன்ற μர்க்கான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதோடு ஹராமான செயல்களிலும் ஈடுபடக் கூடாது.

நமது ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!

குறிப்பு: இந்தப் பிரசுரத்தில் ஹஜ் பற்றிய சுருக்கமான விபரக் குறிப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பி.ஜே. எழுதிய, நபிவழியில் நம் ஹஜ் என்ற நூல் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்
அதிராம்பட்டினம் கிளை

1 கருத்துரைகள் :

அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கங்கள்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.