Tuesday, December 21, 2010

இஸ்லாமிய திருமணம் - தொடர் 3

முந்தய தொடர்கள்:

தொடர் 3:


திருமண ஒப்பந்தம்:

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.
(அல்குர்ஆன் 4:21)

திருமணம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று; அது வாழ்க்கை ஒப்பந்தம் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

ஒப்பந்தம் என்பது அதில் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் புரியக் கூடிய மொழியில் அமைந்திருக்க வேண்டும். புரியாத பாஷையில் எவரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.

நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற, மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம் முடிந்து விடும்.

அல்லது உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா? என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும்.

இதற்கென்று குறிப்பிட்ட எந்த வாசகமும் கிடையாது. அரபு மொழியில் தான் அந்த வாசகம் அமைய வேண்டும் என்பதும் கிடையாது.

(குத்பா) திருமண உரை:

திருமணத்தின் போது குத்பா எனும் உரை நிகழ்த்தும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆனால் திருமணத்தின் போது குத்பா எனும் உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவதற்காக எந்தத் திருமணத்திற்கும் சென்றது கிடையாது. அழைக்கப்பட்டதும் கிடையாது.

தமது மகளின் திருமணத்தின் போது கூட அவர்கள் உரை நிகழ்த்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆயினும் மக்கள் கூடும் இடங்களில் தேவை எனக் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இந்தப் பொதுவான அனுமதியின் அடிப்படையில் திருமண உரையினால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று கருதினால் அதைத் தடுக்க முடியாது. ஆனால் குத்பா எனும் உரை ஏதும் நிகழ்த்தப்படாவிட்டால் திருமணத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

சாட்சிகள்:

திருமணத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவையனைத்தும் பலவீனமானவையாக உள்ளன. ஆயினும் கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு குர்ஆன் கூறுகிறது.

கடன் கொடுக்கும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 2:282 வது வசனம் கூறுகிறது.

அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 4:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரண சாசனம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இறைவன் கூறுகிறான். (திருக்குர்ஆன் 5:106)

இதை அடிப்படையாகக் கொண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பதை அறியலாம்.

திருமணம் செய்த பின் ஒரு தரப்பினர் பிறகு மறுத்து விடக் கூடும் என்பதாலும், விபச்சாரத்தில் ஈடுபடுவோரும் மாட்டிக் கொள் ளும் போது தாங்கள் கணவன் மனைவியர் என்று கூறித் தப்பித்து விடாமல் இருப்பதற்காகவும் ஏனைய கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வது போலவே திருமணத்திலும் குறைந்தது இரு சாட்சிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

நாளை விவகாரம் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் தேவைப்படுகின்றனர். சடங்குக்காக சாட்சிகள் ஏற்படுத்தப் படவில்லை.

உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுமானால் திருமணத்தின் முக்கியமான பேச்சுவார்த்தைகள், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் அவர் பார்வையில் நடக்க வேண்டும். அவர் தான் சாட்சியாக இருக்கத் தக்கவர்.

மணப் பெண்ணின் சம்மதம் பெறப்பட்டதும், மஹர் கொடுக்கப்பட்டதும், எவ்வளவு மஹர் என்பதும் அவருக்குத் தெரிய வேண்டும். இந்த விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு நபர்களை சாட்சிகளாக ஆக்குவது அர்த்தமற்றதாகும்.

எளிமையான திருமணம்:

திருமணங்கள் மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. பிறர் மெச்ச வேண்டுமென்ப தற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் திருமணங்கள் நடத்தப்படக் கூடாது.

வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங் கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது. வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

(திருக்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

(திருக்குர்ஆன் 7:31)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(திருக்குர்ஆன் 17:26, 27)

குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388

திருமண விருந்து:

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய வலீமா விருந்தில் ஒரு ஆட்டை வலீமாவாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். எனவே விருந்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.

வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5177

வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸின் தொடரில் யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

விருந்தை ஏற்பது அவசியமென்றாலும் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடந்தால், அல்லது தீய நடத்தை உடையவரால் விருந்து வழங்கப்பட்டால் அதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும்.

நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸயீ 5256

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.

அபூமஸ்வூத்(ரலி) அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா? எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டு, உடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள்.

நூல்: பைஹகீ பாகம்:7, பக்கம் : 268

என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப் பட்டவர்களில் அபூ அய்யூப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா? எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர் என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் (ரலி) அவர்கள் உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லை என்றார்கள். மேலும் உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன் என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள்.

தப்ரானியின் கபீர் பாகம்: 4, பக்கம்: 118

மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் மலிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நாள் நட்சத்திரம் இல்லை:

திருமணத்தை நடத்துவதற்கு நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. அவரவரின் விதிப்படி நடக்க வேண்டியவை யாவும் நடக்கும் என்ற நம்பிக்கையுடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் நல்லது ஏற்படும் என்றோ, குறிப்பிட்ட இன்னொரு நாளில் கெட்டது ஏற்படும் என்றோ நம்ப முடியாது.

வளர்பிறையில் திருமணம் நடத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்றோ, தேய் பிறையில் நடத்தினால் தேய்ந்து விடும் என்றோ கிடையாது. இப்படியெல்லாம் நம்புவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

வளர்பிறை பார்த்து, நல்ல நாள் பார்த்து செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் முறிந்து விடுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதிலிருந்தும் இது மூட நம்பிக்கை என்பதை உணரலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த அரபியர் ஷவ்வால் மாதத்தை பீடை மாதம் என நம்பி அந்த மாதத்தில் நல்ல நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

இதுபற்றி ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்திலேயே திருமணம் செய்தார்கள். ஷவ்வால் மாதத்திலேயே உறவும் கொண்டார்கள். அவர்களின் மனைவியரில் என்னை விட அவர் களுக்கு விருப்பமானவர் எவர் இருந்தார்? என்று குறிப்பிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 2551, நஸயீ 3184

எனவே திருமணத்தை எந்த மாதத்திலும் நடத்தலாம். எந்த நாளிலும் நடத்திலாம். எந்த நேரத்திலும் நடத்தலாம். குறிப்பிட்ட நாளையோ, நேரத்தையோ கெட்டது என்று ஒதுக்குவது கடுமையான குற்றமாகும்.

ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4826, 6181, 7491

எனவே ஒரு நாளை கெட்ட நாள் என்று கூறினால், நம்பினால் அல்லாஹ்வையே கெட்டவன் எனக் கூறிய, நம்பிய குற்றம் நம்மைச் சேரும்.

திருமண துஆ:

நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.

ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்-ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது. அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக் கேட்பது அர்த்தமற்றதாகும்.

உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம் என்று அல்குர்ஆன் கூறுகிறது.

(அல்குர்ஆன் 7:38)

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக வேறு துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.

மணமக்களுக்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச் செய்துள்ளனர்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் - புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள்.

(புகாரி 5155, 6386)

இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக என்று கூறி வாழ்த்தலாம்.
பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும் என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 15181)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599

அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக என்பது இதன் பொருள். ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டியவை:

திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்.

* தாலி கட்டுதல் - கருகமணி கட்டுதல்

* ஆரத்தி எடுத்தல்

* குலவையிடுதல்

* திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்

* ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்

* வாழை மரம் நடுதல்

* மாப்பிள்ளை ஊர்வலம்

* ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல்

* பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.

*முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.

* தலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது.

* பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.

* பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.

நூல்: அபூதாவூத் 3512

இந்த ஆக்கம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின்'இஸ்லாமிய திருமணம்' என்ற நூலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் முழுவதும் இங்கு தொடராக வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ். அந்த நூலை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்.