Thursday, September 23, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் போது அமைதி காப்போம்! TNTJ வெளியிட்டுள்ள அறிக்கை!

பாபரி மஸ்ஜித் நிலம் உரிமை குறித்து வருகின்ற 24.09.2010 (வெள்ளி) அன்று தீர்ப்பு வெளிவரவிருப்பது அறிந்ததே. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்திற்கும், தனது கட்டுப்பாட்டில் உள்ள 600 பள்ளிவாசல்களுக்கும் பின் வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 1949ஆம் ஆண்டு வரை பாபர் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். அதாவது உரிமை மற்றும் அனுபவம் ஆகிய இரு அடிப்படைகளில் அந்த இடம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்று உறுதியாகிறது.

இந்திய நீதி மன்றங்களில் சிவில் வழக்குகளில் இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அனுகூலமாகவே அமைய உள்ளது.

அவ்வாறு தீர்ப்பு அநுகூலமாக அமையும் பட்சத்தில் முஸ்லிம்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் அடக்கமும் அமைதியும் காத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இரு அடிப்படைகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

எதிர் வரும் தீர்ப்பு தொடர்பாகவே கடந்த 21.09.2010 அன்று டிஎன்டிஜே பொதுச் செயலாளர் எம்.அப்துல் ஹமீது, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கலீல் ரசூல், மாநில மேலான்மைக்குழுத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா, மேலான்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஆகியோர் அடங்கிக குழுவினர் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் அவர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது அயோத்தி தீர்ப்பையொட்டி தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

அதற்குக் காவல் துறைத் தலைவர் டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமாறு கேட்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

பள்ளிவாசல்களில் இதுபற்றிய அறிவிப்பு செய்யும்படியும் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பலத்த ஏற்பாடுகள் போடப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கு முயலும் தீயசக்திகள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியையும் காவல்துறைத் தலைவர் அளித்திருக்கிறார்.

இவ்விஷயத்தில் காவல்துறையினருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவதாக டிஎன்டிஜே நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே அமைதி காப்போம்.

- அப்துல் ஹமீத், பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்